Friday, June 14, 2013

சிவவாக்கியம் (141-150)

சிவவாக்கியம் (141-150)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-141

சிட்டர் ஒத்து வேதமும் சிறந்த ஆகமங்களும்
நட்ட காரணங்களும் நவின்ற மெய்மை நூல்களும்
கட்டி வைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்.


வேத பண்டிதர்கள் ஓதும் நான்கு வேதங்களும், சிறந்ததாய் விளங்கும் ஆகம சாஸ்திரங்களும், கோயில் கட்டி அதன் கருவறையில் கற்சிலைகள் நட்டு வைத்து கும்பாபிஷேகம் செய்யும் காரணங்களும், திருமந்திரம், திருக்குறள், திருவாசகம் போன்ற உன்னதமான நூல்களும், யோகா தவத்தால் கட்டிச் சேர்த்து வைத்த போதப் பொருளும், இராமாயணம், மகாபாரதம், புராணம் போன்ற கதைகளில் எல்லாம் உகந்ததாகச் சொல்லாப்படும் பிரமம் போன்ற இவை யாவும் எனக்குள் இருக்கும் எம்பிரான் ஈசனை அறிந்தபின் எனக்குள்ளேயே ஒரு பொட்டாக ஒரே மெய்ப்போருளாகவே முடிந்திருக்கிறதே என்பதை உணர்ந்து கொண்டேன்.
*******************************************
சிவவாக்கியம்-142

நூறு கோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள் இருந்தும் ஓதினால் அதன்பயன்
ஆறும் ஆறும் ஆருமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமே.

எவ்வளவோ ஆகமங்கள், அதில் எத்தனயோ மந்திரங்கள், வாழ்நாள் காலம் முழுவதும் இருந்து ஒதிவந்தாலும், அதனால் மெய்நிலை அடைய முடியுமா? அதன் பயனால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதினெட்டுப் படிகளையும் கடந்து அகத்தில் ஓர் எழுத்தாக மெய்ப் பொருளை அடைந்து அதையே நினைந்து 'சிவயநம' என்று ஓதி தியானிக்க சோதியாக உலாவும் ஈசனே உன் குருவாக வந்து பேசுவான்.
*******************************************
சிவவாக்கியம்-143

காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!

இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள். அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான். அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.
*******************************************
சிவவாக்கியம்-144
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்
நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!!

எட்டாகிய எண்சான் உடம்பிலே இரண்டாகிய உயிர் உள்ளது. இப்படி எட்டும் இரண்டுமாய் இணைந்த இத்தேகத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா ஆகிய ஆறு ஆதாரங்கள் உள்ளது. இவ்வுடம்பில் சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்நிமண்டலம், என்ற மூன்று மண்டலங்கள் இருக்கின்றது. இப்படி உள்ள உடம்பாகிய மண்டபத்தில் நடுவாக இருந்து நாதனாகிய ஈசன் ஆடி நின்று ஆட்டுவிக்கின்றான்!!!
*******************************************
சிவவாக்கியம்-145 
நாலிரண்டு மண்டலத்துள் நாத நின்றது எவ்விடம்
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்
சேரண்டு கண்கலந்து திசைகள் எட்டு மூடியே
மேலிரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே!!!

எண்சான் உடன்பில் நாதன் நின்றது எந்த இடம்? இடகலை, பிங்கலை எனும் மூச்சில் மூலநாடியான சுழுமுனையில் ஏற்றி இறக்கி, வாசிப் பயிற்சியினால் தீயாக விளங்கும் ருத்திரனை கண்டு அங்கு சந்திர, சூரியனாக விளங்கும் இரண்டு கண்களையும் ஒன்றாக இணைத்து எட்டுதிசைகளையும் மூடி அகக்கண்ணைத் திறந்து தியானம் செய்யுங்கள். மேலான அவ்வாசலில் சக்தியும், சிவனும் கலந்து சிவமாக ஆடி நிற்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-146

அம்மை அப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை அப்பன் அப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மை அப்பன் அப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மை அப்பன் அன்னை அன்றி யாரும் இல்லை ஆனதே.

தாயாகவும் தந்தையாகவும் நாத விந்துதான் அப்புவான நீராக இருப்பதை அறிந்தும் நாத விந்தை அறியாமல் உள்ளீர்களே. அப்பு எனும் நீரே விஷ்ணு, பிரம்மா, சிவன் எனும் மும்மூர்த்திகளாக இருக்கின்றனர். அந்த நீரே ஆதிக்கும் ஆதியான அனாதியாகவும், பிரமமாகவும் இருப்பதை உணர்ந்து அது ஒன்றையே எண்ணித் தியானியுங்கள். அதுவே அம்மையாகவும், அப்பனாகவும் வாலை அன்னையாகவும் இருந்து அருளும்.
*******************************************
சிவவாக்கியம்-147

உருத்தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்
னே
கருத்தரிப்பதற்கு முன் காரங்கள் எங்
னே
பொருத்தி வைத்த போதமும் போருந்துமாறது எங்
னே
குருத்திருத்தி வாய்த்த சொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!!!

ஆன்மா உருத்தரிப்பதற்கும் உடம்பு எடுப்பதற்கும் முன் தாய் தந்தை உடல் கலந்தது எவ்வாறு? அது நினைவு எனும் ஆகாயத்தில், அதனால் தோன்றிய சுக்கில சுரோணித கலப்பால் நீராகி தாயின் கருவில் சிசுவாக வளர கார
ங்கள் என்ன? அது உகாரமாகிய உணர்வால் இரு வினைக்கு ஒப்பவே. இவ்வுடலில் பொருத்தி வைத்த போதப் பொருள் பொருந்தி இருப்பது எவ்விடம்? அது அகாரமாகிய அறிவாகி மெய்ப்பொருளாக உடம்பில் உள்ளது. இவை யாவையும் குரு திருத்தமாக சொல்லித்தந்து உபதேசித்ததை உணர்ந்து அதையே குறித்து தியானித்து இறவாநிலைப் பெறுங்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-148 
ஆதிஉண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை
சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே!!!

ஆதியை அறிந்து, அது ஒன்றையே பற்றி, தவம் புரியும் ஞானிகள் அழிவது இல்லை. அவர்களுக்கு நான்கு வேதமும் தேவை இல்லை. அவர்கள் சோதியான ஈசனைக் கண்டு அங்கெ சொல் ஏதும் இல்லாமல் சொல்லிறந்த தன்மையும் இல்லாமல் மௌனத்தில் ஊன்றி சும்மா இருப்பார்கள். ஆதியான அணுவில் அயன், அரி, அரன் என மூவரும் இருப்பதை உணர்ந்து, பிரா
சக்தியாக வாலை அமர்ந்தே தானாகி நிற்பதனையும் உணர்ந்து தியானத்தில் இருப்பார்கள். இதனை வேறு யார் அறிவார்கள் அண்ணலே!!!
*******************************************

சிவவாக்கியம்-149

புலால் புலால் அதேன்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருப்பது எங்
னே
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பெருலாவும் தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே!

நாறும் இறைச்சியிலான இவ்வுடம்பு இதுவென்று அறிந்தும் வேறுபடுத்தி இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள். இறைச்சியிலான  உடம்பைவிட்டு இறைவன் பிரிந்து தானாகி இருந்தது எவ்வாறு? உடம்பாகவும், உயிராகவும் இருந்து வாசியாகி உலாவிக்கொண்டு தானாகி நின்ற பரம்பொருள் இவ்வுடம்பில்தான் வித்தாக முளைத்து முதலாக உள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்டு இவ்வான்மாவை மேம்படுத்த, சோதியாக எழுந்த ஈசானை கண்டு தியானம் செய்யுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-150 

உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டு பட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே!!!

தாயின் இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்துதான் நீங்கள் வளர்ந்தீர்கள். ச
தையாக இருந்த ஒன்றிலிருந்தே பிண்டம் உருவாகி வெளிப்பட்டு தாயாகவும், சேயாகவும் இரண்டானது. அமிர்தமான தாய்ப்பால் கொடுப்பதும் மாமிசப்புலாலான சதைதானே. மாமிசத்தில் இருந்தே உருவாகி மாமிசமாகவே வளர்ந்த நீங்கள் மாமிசமில்லாத சதுரமான நான்கில் நின்று வளராமல் இருந்தது எது என்பதை அறிவீர்களா? மற்றவரை சைவர் இல்லையென வெறுக்காது சைவத்தைக் கடைப்பிடியுங்கள்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment