Saturday, June 15, 2013

சிவவாக்கியம் (171-180)

சிவவாக்கியம் (171-180)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-171 

தாதர் செய் தீமையும் தலத்தில்செய் கீழ்மையும்
கூத்தருக்கு கடைமக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே!
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்து,  துன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.

******************************************* 
சிவவாக்கியம்-172
 
ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும்
பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும்
இழை அறுந்து போனதும் என்ன மாயம் ஈசனே!!

நெசவு நெய்யும் பாவைப்போல அங்கும் இங்கும் ஓடியோடி உழைத்து மூச்சானது ஓடி ஒய்ந்து உயிர்போகின்ற தருனஹ்தில் உங்கள் உள்ளங்கால் வெளுத்து படுக்கையில் படுத்ததும் அச்சமயம் ஓடிய நேசவுப்பாவிலே பூனை வந்து குதித்ததும், பாவிழை அறுந்து போவது போல, எமன் வந்து உயிரை எடுத்துப் போவது போனதும் மூச்சு நின்றதும், மருத்துவன் வந்து பார்த்து உயிர் போய்விட்டது என்பதும், பாவிலே நூல் இழை அறுந்து தறி ஓட்டம் நின்றுபோவது போலவே உடம்பைவிட்டு உயிர் மூச்சு நின்று போவது யாவும் உன்மாயமே ஈசனே!! 
******************************************* 
சிவவாக்கியம்-173
 
சதுரம் நாலு மறையும் எட்டுதான தங்கி மூன்றுமே
எதிரத்தான வாயு ஆறு என்னும் வட்ட மேவியே
உதிரந்தான் வரிகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்
கதிரதான காயகத்தில் கலந்தேழுந்த நாதமே!!

சதுரம் எனப்படும் நான்கு வேதங்களும் எண்சான் உடம்பிலே தங்கி, மூன்றான ஓங்காரமாய் இருக்கின்றது. அதையே பிரனவமாக்கி மூன்றெழுத்தால் ஆறு ஆதார வட்டங்களிலும் வாசியினால் மேலேற்றிப் பயில வேண்டும். உயிரி
லிருந்தே உதிரங்கள் எட்டாகிய உடம்பு முழுவதும் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அகார, உகாரத்தை உயிரில் அறிந்து சிரசு எனும் தலை உச்சியில் சூரியனாக இருக்கும் சூட்சும உடம்பில் சுழுமுனையில் அவ்வாசியினைச் சேர்க்க நாத ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். 
******************************************* 
சிவவாக்கியம்-174
 
நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
மேலு பத்து மாறுடனூமே திரண்ட தொன்றுமே
கோழி அஞ்ச்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
தொழு மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே

மூலாதாரத்தில் நான்கு இதழ் கமலமாகவும் 'ஓம்' என்ற மூன்று எழுத்தாகவும், சுவாதிட்டானத்தில் ஆறு இதழ் கமலமாகவும் 'ந' என்ற மண் பூதமாகவும், மணிப் பூரகத்தில் பத்து இதழ் கமலமாகவும் 'ம' என்ற நீர்பூதமாகவும், அனாகத்தில் பனிரெண்டு இதழ் கமலமாகவும் 'சி' என்ற நெருப்பு பூதமாகவும், விசுத்தியில் பதினாறு இதழ் கமலமாகவும் 'வ' என்ற காற்றுப் பூதமாகவும், ஆஞ்ஞாவில் இரண்டு இதழ் கமலமாகவும் 'ய' என்ற ஆகாயப் பூதமாகவும் உயிர் ஒன்றாகவும் உங்கள் உடம்பில் அஞ்செழுத்து அமைந்துள்ளது. இதனை உண்மையான குறு விரும்பி உபதேசித்து அதை உன் உடம்பிலேயே உணர்ந்து உபாசித்தால் நாத ஒலித் தோன்றும். அந்த நாதம் 'ஓம் நமசிவய' கோசமாக எழுந்து நிற்கும்.   
******************************************* 
சிவவாக்கியம்-175
 
கோஷமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும் தேசமாய்
பிறந்ததும் சிவாயம் அஞ்செழுத்துமே
ஈசனார் இருந்திடம் அனேக
னேகே மந்திரம்
ஆசனம் நிரந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே!

ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் என்ற கோச அட்சரங்களாக எழுந்து கூடாகிய உடலுக்குள் ஊடுருவி நின்று இத்தேசத்தில் தேகம் எடுத்து பிறந்ததும் 'நமசிவய' என்ற அஞ்செழுத்து மந்திரத் தத்துவத்தாலே தானே. சோதியான ஈசனையும், அவன் நம் உடம்பில் தற்பரமாய் நின்ற இடத்தையும் தான், அனைத்து மந்திரங்களும் வேதங்களும் சொல்கின்றது. அதனை ஐந்து ஐந்து கட்டங்களாக வரைந்து 'நமசிவய'  என்ற அஞ்செழுத்தின் பீஜ அட்சரமாக அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்தையும் கோச அட்சரங்களால் ஐயும், கிலியும், சவ்வும், றீயும், ஸ்ரீயும் எழுத்தையும் அமைத்து 9, 11, 4, 15, 12 என்ற என்னையும் கொடுத்து அது மொத்தம் ஐம்பத்தொன்று என்பதையே ஐம்பத்தோர் அட்சரம் என்பார்கள்.  
******************************************* 
சிவவாக்கியம்-176
 
அங்கலிங்க பீடமாய் ஐம்பத்தோர் எழுத்திலும்
பொங்கு தாமரையிலும் பொருந்துவார் அகத்திலும்
பங்கு கொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே!!

உடம்பில் உள்ள அங்கத்தை பீடமாக இலிங்கமே ஐம்பத்தொரு அட்சரமாக உள்ளது. சகஸ்ரார தலமான தாமரையில் மனதை நிறுத்தி தியானத்தில் பொருந்துவார்கள் அகத்தில் சக்தியும் சிவனுமாய் பக்குகொண்டிருக்கும் சோதியாக பரந்து இருப்பதும் பஞ்சாட்சரமே! இந்த அஞ்செழுத்தில் சிகரமாகும் நாத ஒளியாகவும் இருப்பதும் பஞ்சாட்சரமே. இதை அறிந்துணர்ந்து ஒலியையும், ஒளியையும் ஒன்றாக்கி தியானியுங்கள்.    

******************************************* 
சிவவாக்கியம்-177 

உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?
உவமையாக்கி அண்டத்தில் உருவி நின்றது எவ்விடம்?
தவம்தான பரமனார் தரித்து நின்றது எவ்விடம்?
தற்பரத்தில் சலம் பிறந்து தாங்கி நின்றது எவ்விடம்?

 

எதனோடும் ஒப்பிடமுடியாத தனித்தன்மையான பேரொளி நம்முள் உருவமாக நிற்பது எவ்விடம்? ஆகாயத்திற்கு உவமையான மனம் அண்டத்திலும் பிண்டத்திலும் அமைந்திருப்பது எந்த இடம்? தவத்திற்கு உரிமையான பரமனார் மெய்ப்பொருளாய் தரித்து நின்றது எந்த இடம்? தன் உடம்பில் நீராக நின்று தாங்கி தற்பரமாய் இருப்பது எந்த இடம்?

******************************************* 
சிவவாக்கியம்-178
 
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்?
சொல்லு கீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்/
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே!!!

மாடான மனதில்தான் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மூன்றும் பிறந்தது. அந்த நான்கு அந்த கரணங்களும் உடம்பில் எங்கு இருக்கின்றது. சொல்லும் வார்த்தைகள் தோன்றுவதும் ஏழு உலகங்களாக நின்றதும் அதுவாக இருப்பதும் எவ்விடம். அவளதான வாலை மேரு சக்கரமாகவும் அம்மையான மனோன்மணியாகவும் அமர்ந்திருந்தது எவ்விடம்? அவனும் அவளும் ஆடியே அருஞ்சீவன் உருவானது. எல்லாம் சிவசக்தியின் திருவிளையாடல் என்பதை புரிந்து தியானம் செய்து இச்சீவனை சிவனோடு சேருங்கள்.  
.
******************************************* 
சிவவாக்கியம்-179
 
உதிக்குகின்றது எவ்விடம் ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்குகின்றது எவ்விடம் கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்க நின்றது எவ்விடம் மதி மயக்கம் எவ்விடம்?
வித்திக்கவல்ல ஞானிகள் விரித்துரைக்க வேணுமே!

மனம் உதிப்பதும், ஒடுங்குவதும் எந்த இடம்? கதியாகிய வாசி இருப்பது எந்த இடம்? கண்ணுறக்கம் கொள்வது எந்த இடம்? யாவரும் மதின்க்கும்படி நின்றது எவ்விடம்? மதியாகிய அறிவும் மயக்கமான மாயையும் தோன்றிய இடம் எது என்பதையெல்லாம் விதியை வெல்ல ஞானம் போதிக்க வந்த குருமார்களே!! சீடர்கள் ஆறியும் வண்ணம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

******************************************* 
சிவவாக்கியம்-180 
 
திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருந்கிலாத கோலம் எட்டு வன்னியோடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றி வந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே!

மீண்டும் மீண்டும் இப்பூவுலகில் பிறந்திறந்து உழலும் உடல் எண்சான் அளவே. அந்த எட்டான உடலில் திறமாக செயல்படும் உயிர் எட்டாகிய ஆகாரத்தின் வாசலில் உள்ளது. அது ஆகாயமான எட்டாகி இருக்கும் கோலமும் அதிலே வன்னி எனும் தீயாக ஈசன் இருந்து ஆடும் இடம் அகாரம். அந்த எட்டான அகாரத்தில் ஒரு தூசோ, துரும்போ அண்டாது. பரிசுத்தமான கோலமாய் உள்ள இடமாகிய அகாரத்தில்தான் சோதி உள்ளது. இதனை யாவும் எட்டாக விளங்கும் தன் உடம்பிலே காணாமல் வேறு எங்கெங்கோ சுற்றி வருகின்ற மருள் பிடித்த மனிதர்களே! அரும்போ, மோட்டோ இல்லாத பூவாக உன் ஆன்மா உனக்குள் இருப்பதை உணர்ந்து அதிலேயே தியானித்து பிறவா நிலை பெற வாருங்கள். இது என் ஐயன் மீது ஆணையிட்டு உண்மையாகச் சொல்லுகின்றேன்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment