Saturday, June 22, 2013

சிவவாக்கியம் (221-230)

சிவவாக்கியம் (221-230)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-221 

உயிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பாவதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா


இந்த உடம்பை எடுப்பதற்கு முன்னர் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த ஞானியே உண்மையைக் கூற வேண்டும். உடம்பாக உருவெடுக்கும் முன்பு உயிர் நினைவு என்னும் ஆகாயத்தில் இருந்தது. உயிர் சிவனாகவும் உடம்பு சக்தியாகவும் இருக்கின்றது. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அச்சிவமே ஞானம். அதுவே மெய்ப்பொருள். அதுவே அநாதியான சோதி. ஆதலின் உடல் தத்துவங்களையும், உயிர் தத்துவங்களையும் நன்கு அறிந்து கொண்டு சிவத்தைச் சேர தியானியுங்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-222
சுழித்தவோர்  எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆருப
ங்காயம் கலந்து அப்புறத் தலத்துளே.

சுழித்த ஒரேழுத்தான அகாரத்தை கண்டத்தில் வைத்து சொற்கள் உதிக்கும் முகமான மூலாதாரத்தில் செலுத்தி இருத்தி பின் உகாரத்தால் குண்டலினியை எழுப்பி மேலேற்ற வேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து மூல நாடியான சுழுமுனையில் அழுத்தி சிகாரத்தால் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் கலந்து வாசியை செலுத்தி அப்புறத்தலமான சகஸ்ராரத்தில் சேர்க்க வேண்டும். இதுவே சித்தர்களின் வாசியோகம். 
****************************************** 
சிவவாக்கியம்-223
உருத்தரிப்ற்கு முன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்
கெடும் குருக்களே.  

உடம்பாக உருவாவதற்கு உயிரானது ஆகாயத்தில் நாதமாக புகுந்திருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடம்பு தாயின் கருவறையில் சுக்கில சுரோணித நீராய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் அறிவான சோதியாக மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடம்பில் உயிர் சூட்சுமமாக இருப்பதை குறித்தறிந்து கொண்டு அதிலே இறைவனே குருவாக உறைவதை உணர்ந்து கொள்ளுங்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-224
எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் கர்த்தாவாக புகுந்திருந்தான் என்பதை என்னிலேயே உணர்ந்து கொண்டேன். ஒன்றாய் உள்ள இறைவனுக்கு பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள் அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து மெய்பாடுபடுவதற்கு அணுகமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதென்றும் உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். அது உங்களது அறியாமையால் விளைந்த பேதமேயன்றி இதுவே இறைவனில் பேதம் இல்லை. உண்மையாக உள்ள இறைவன் ஒருவனேயன்றி இரண்டு பேதங்கள் ஏதும் இல்லை. அவன் எங்கும் எப்போதும் எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாகவே  விளங்குகின்றான்.  
******************************************* 
சிவவாக்கியம்-225
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே!

 
விஷ்ணுவாலும் பிரம்மாவாலும் தேடிக்காண முடியாத அடி முடியை, யாவர்க்கும் பெரியவனாக நின்ற ஈசன் ஆண்ட சராசரங்கள் எங்கும் ஒன்றாக விளங்குகின்றான். ஈசன் ஒருவனே அநாதியானவன். இந்த உலகம் யாவும் உள்ள உயிர்கள் எல்லாவற்றிலும் பொருந்தி நின்ற பாதம் ஒன்று அல்லவோ, எல்லாமே அவனுக்குள் அடங்கி யாதும் ஒன்றாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். விஷ்ணு பிரம்மா சிவன் என மூவரையும் வேறுபடுத்தி விரிவுரைகள் செய்து வாய் ஜாலத்தால் வேடம் போட்டு திரியும் மூடர்களே! மூவரும் ஒன்றாக உனக்குள்ளேயே இருப்பதை அறிவை அறிவால் அறிந்து உண்மையை உணர்ந்து தெளிந்து பாருங்கள். இங்கும், அங்கும், எங்குமே ஒன்றான மெய்ப்பொருள் சிவமே!!!!  

******************************************* 

சிவவாக்கியம்-226
வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே  

வேகா தலை சாகாக்கால் போகப் புனலாக இருக்கும் திருநீரை அறியாது வெந்த விபூதியை நீராக்கி உடம்பு முழுவதும் பூசி வேடம் போடுகிறீர். நீராக நின்ற மந்திரத்தில் நெருப்பாக ஈசன் இயங்குவதை அறிந்து அதையே சிந்தையுள் வைத்து சிவனை நினைந்து 'சிவயநம' என தினமும் செபித்து தியானம் செய்யுங்கள். அதுவே அனைத்துக்கும் முந்தி தோன்றிய மந்திரம். மூல மந்திரம், பஞ்சாட்சரத்தில்தான் ஈசன் இருந்து இயங்குகின்றான்.

******************************************* 
சிவவாக்கியம்-227 

அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!

ஓங்காரமே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம், அதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றும் அடங்கியுள்ளது. இதில் யாவிலும் சிகரமாக இருப்பதுவே சிகாரம். அகாரமே உடம்பாகி அனேகனேக ரூபங்களாவதற்கு   காரணமாய் ஆனது. உகாரமே உயிராகி உருத்தரித்து நிற்பதற்கு காரணமாய் ஆனது. மகாரமே மணமாகி இந்த வையகம் முழுதும் மயங்குவதற்கு காரணமாய் ஆனது. இவை யாவிற்கும் ஆதியாக சிகாரமே காரணம் என்பதை அறிந்து சிவமே பொருளாய் இருப்பதை தெளிந்து உணர்ந்து கொண்டு தியானியுங்கள்.
 
******************************************* 
சிவவாக்கியம்-228
 

அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ
செவ்வை ஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
.  
'ஓம்' என்ற ஓங்காரத்தில் அ, உ, ம் என்ற மந்திரங்கள் மூன்றேழுத்தாக இருக்கின்றது. இதனை சித்தர்கள் அவ், உவ், மவ் என்றும் அம், உம், இம் என்றும் சொல்கிறார்கள். அவ்வும் உவ்வும் ஆகிய நாத விந்து சேர்ந்தே அகாரமாகிய உடம்பு பிறந்தது. உவ்வும் மவ்வும் ஆகிய உயிரும் மனமும் ஒன்றாகி ஒன்றி நிற்கின்றது. இப்படி ஓங்காரம் உடலுயிராய் நிற்பதை உணர்ந்து அது செம்மையான பொருளாய் இருப்பதை அறிந்து மின்னலைப் போன்ற சோதியில் கலந்து தியானத்தால் சிவத்தின் திருவடியில் சேரலாம். வ்விதமாக செய்து வரும் நற்குணம் நிறைந்த ஞானிகள் விரிவாக உபதேசிக்க வேணும். 
******************************************* 
சிவவாக்கியம்-229  

ஆதியான அஞ்சிலும் அநாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தோன்றுமே அற்றதஞ் செழுத்துமே.
 .
ஆதியாக உள்ள பஞ்சபூதங்கள் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அஞ்சிலும், அனாதியாக உள்ள அந்தக் கரங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கிலும் சோதியான ஓங்காரத்தில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றிலும், சொரூபம் அற்ற உயிர் உகாரத்தில் சூரிய சந்திர கலையில் இரண்டிலும் எல்லோர்க்கும் பொது நீதியாக விளங்கும் ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவான மெய்ப்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இதுவே ஆதியான ஒன்றாக இருப்பதை உணர்ந்து அதிலேயே ஒன்றி அஞ்செழுத்தால் ஓதி தியானியுங்கள்.
 
******************************************* 
சிவவாக்கியம்-230
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது  ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே 
 
ஆகாயம் இல்லாதது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லாததே ஆகாயம் என்பதை அறிந்து அதிலேயே நாடி தியானம் செய். உடம்பு
இல்லாத உயிர் ஒன்றுமில்லை. உடம்பு இல்லை என்ற நிலையில் உடம்பிலேயே யோகம் செய். நான் என்பது என்ன என்பதை உணர்ந்து, நான் என்ற ஆனவமில்லாது நான் நீயாக ஞான சாதகம் செய். நான் என்பதற்று தானாக நின்றது ஒன்றான சிவமே உன் உடம்பில் தங்கி இயங்கி ஆடுகின்றது. அத்திருவடி பற்றி இறவா நிலை அடையுங்கள்.

*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

7 comments:

  1. can u guys continue this pls, up to 550 Poem

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. நாம் விழிக்கும் வரை கனவினை நிஜம் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அது உண்மையில்லை என்பதை தூக்கம் விழித்த பின்பே உணர்கிறோம், அதே போல இந்த உலக வாழ்க்கையும் ஒரு கனவு நிலையே என்பதை உணர்த்த ஒரு மூன்றாவது நிலை இருக்கிறது அதை உணர்த்தவே பெரியோர்கள் தோன்றுகிறார்கள். (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)

    அந்த மூன்றாவது நிலை என்ன ஐயா????

    ReplyDelete
  4. நீதியான ஒன்று எது, நிறைந்து நின்ற ஆதியான வஸ்து எது அய்யனே. இரக்கம் கொண்டு அடியேனுக்கும் காட்டி ஏற்றுக் கொள்வீர்களா

    ReplyDelete