Saturday, June 22, 2013

சிவவாக்கியம் (211-220)

சிவவாக்கியம் (211-220)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-211 

அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ
மிக்க வந்த யோகிகாள் விரைந்துறக்க வேணுமே!!


உடம்பு அனாதியா? உயிர் அனாதியா? ஐம்பூதமும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்த தகுந்த நூல்கள் அனாதியா? ஆஞ்ஞா எனும் ஆகாயத்தில்  உள்ள சதாசிவம் அனாதியா? யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே!!! எது அனாதி என்பதை விரைந்து விளக்க வேண்டும். எது தொடக்கமும் முடியும் அற்று இருக்கின்றதோ, எது சுய ஒளிபடைத்து விளங்குகின்றதோ, எது உள்ளதும் இல்லாததாகவும் உள்ளதோ அதுவாகிய சிவமே அனாதி. எங்கும் எப்போதும் என்றென்றும் எக்காலத்தும் நித்தியமாய் உள்ளதே அனாதி. 

******************************************* 
சிவவாக்கியம்-212 
ஒன்பதான வாசல்தான்ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம எனும் நாமமே
வன்மமான  பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!!

ஒன்பது வாசல் கொண்ட உடம்பு ஒரு நாள் அழியும் என்பதுவே உண்மை என்றுணர்ந்து எந்நேரமும் இராம நாமம் செபித்து அவன் பாதம் பற்றியிருங்கள். இராம நாமம் மரணபயம் போக்கும். வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் இறக்கும் தருவாயில் நோய் வந்து அவர்கள் வாக்கில் இப்புண்ணிய நாமத்தை சொல்ல மாட்டாது இறப்பார்கள். இது அன்பே சிவம் என்று வாழும் அன்பர்கள் வாக்கில் எப்போதும் அமைந்திருக்கும். அவர்கள் இராமநாமம் என்பது என்ன என்பதைப் புரிந்து ஆராய்ந்து அறிந்து தியானம் தவம்  செய்வார்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-213 
அள்ளி நீரை இட்டதேது அங்கையில் குழைந்ததேது
மெல்லவே மினமினவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்!

உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டு குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்லவே வாய்க்குள்ளேயே முனுமுனுவென்று மந்திரங்களை சொல்லி விளம்பும் மூடர்களே! உங்களுக்குள் கள்ள வேடமாக சூட்சுமமாக விளங்கும் பொருள் எது? மரணம் நேர்ந்த போது கண்களை மூடிவிட்டதற்கு காரணம் எது? என்பதை குருவாக வருபவர்களே, மெதுவாக விளக்கிக் கூறுங்களேன்!!
******************************************* 
சிவவாக்கியம்-214 
அன்னை  கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
மின்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே
உன்னி தொக்குள் உழலும் தூமையுள் அடங்கிடும்
பிள்ளையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!!

தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி அளவே ஆகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே சிசுவாக வளர்ந்து தாயின் வயிற்றுக்குள் உழன்று ஐம்புலன்களுடன் கூடிய உடம்பு உண்டாகி தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பத்து மாதங்கள் தாயின் தூமையின் நீரிலேயே மிதந்து வளர்ந்து அதன் பின்னரே உலகில் உயிர், உடம்பு பிறக்கின்றது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்பதனை உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள்  ஏனெனில் அத்தூமையை உடம்பில் ஒட்டியே பிரம்மம் இருக்கின்றது என்பதனைக் கண்டு அச்சிவத்தை சேர தியானியுங்கள்.

******************************************* 
சிவவாக்கியம்-21
 
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே
அழுக்கிருந்த அவ்விடம் அழுக்கிலாதது எவ்விடம்
அழுக்கிருந்த அவ்விடத்து அழுக்கறுக்க வல்லிரேல்
அழுக்கிலாத சொதியோடு அணுகி வாழலாகுமே!!!
 
அழுக்குப் போகவேண்டும் என்று தினந்தினம் நீரில் குளித்தும் அழுக்கு அகலாத மனிதர்களே! அழுக்கான உடம்பில் அழுக்கான இடம் எது என்பதனை அறிந்தீரா? அவ்விடத்தில் மனதை நிறுத்தி அம்மனத்தில் உள்ள ஆசைகளையும் பாவங்களையும் பக்தி, தொண்டு, யோகம், ஞானம் என்ற சாதனங்களால் அறவே ஒழித்து தியானிக்க வல்லவர்களானால், அழுக்கே இல்லாத பரிசுத்தமான அவ்விடத்தில் சதியாக விளங்கும் ஈசனோடு இணைந்து மரணமிலா பெரு வாழ்வில் வாழலாம்.

******************************************* 
சிவவாக்கியம்-21

அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய்
மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்கு
றீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடு போய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே!

அணுக்களால் திரண்டு உருவானது உடம்பு, அது இவ்வுலகில் அனைத்தும் பலவிதமான உயிரி
ங்களாக விளங்குகின்றது. நாள் வகை யோனிகளால்  வெளிவரும் உயிரில்தான் மனிதன் பிறக்கின்றான். இப்படி வந்த மனிதர்களின் அறிவில் உதித்த மனுதர்மம், சாஸ்திரங்கள் போன்ற நூல்களைப் படித்து உண்மையை உணராது மயங்குகின்றீர்கள். ஆத்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறி வருகின்றது. இவை யாவும் நன்குணர்ந்து தன்னை அறிந்து தற்பரமாய் இருக்கும் பரம்பொருளை பற்றி நினைவாக நினைப்பது எது? என்றும் நிலையாக நிற்பது எது என்பதையும் அது நீராக இருப்பதுவே என்பதையும் உணர்ந்து அவ்விடத்திலேயே தியானியுங்கள். நினைவுதனை நினைவு கொண்டு நினைந்து பாருங்கள். 
******************************************* 
சிவவாக்கியம்-217


ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதி நாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!!!

ஆதியாக அண்டங்கள் யாவிலும் தோன்றி அப்பாலுக்கப்பாலாய் நின்று சோதியாக இயங்கும் ஈசனை சுருதியுடன் கூடிய இசையோடும் நாதலயமாகவும் தனக்குள் யாரும் போதிக்காமல் ஓதாதுணர்ந்த மெய் ஞானிகள் சோமசுந்தரனையே தியானித்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்ந்தால் சாதி பேதம் என்பதை எங்கும் எப்போதும் யாரிடமும் பார்க்கமாட்டார்கள். சற்றும் பேதம் இல்லாது விளங்கும் பரம்பொருளையே அனைவரிடமும் பார்ப்பார்கள்.
 
******************************************* 
சிவவாக்கியம்-218

ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடி யூடு போய்
எக்கறுத்தி  ரெட்டையும் இ
றுக்கழுத்த வல்லிரே
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுதே!! 

ஆக்கை என்ற வாழ்வில் ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடம்பு மூப்பு அடைந்தாலும் அது என்றும் இளமையோடே இருக்கின்றது. நாக்கை உள் மடித்து உண்ணாக்கில் வாசியை வைத்து ஊதி நாதத்தை உண்டு பண்ணி நடு நாடியான சுழுமுனை  வாசலைத் திறக்கவேண்டும். இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றை எக்கி எட்டு ரெண்டு அட்சரத்தால் இறுக்கி சுழுமுனையில் வாசியை அழுத்தி தியானிக்க வல்லவர்கள் ஆனால் தவம் கூடி மெய்ப்பொருளில் சேர்ந்து பார்க்கும் திசைகளில் எல்லாம் பரப்பிரம்மம் காட்சி தரும் நீயே அதுவாக ஆவாய்.
 
******************************************* 
சிவவாக்கியம்-219 
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!

மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களும் ஐந்து கோஷங்களும் ஐந்து அவஸ்தைகளாகவும் இருந்து அல்லல் செய்து நிற்கிறது. அஞ்செழுத்தே நமசிய என்ற பஞ்சாட்சரமாக அமர்ந்து நமக்குள் இருக்கின்றது. ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களில் இயங்கும் அஞ்செழுத்தை நமசிவய என்று உச்சரித்து செபித்து தியானிக்க வேண்டும். அஞ்செழுத்தின் உட்பொருள் யாவையும் நன்கு உணர்ந்து உடலையும் உயிரையும் பாதுகாத்து அஞ்செழுத்தை ஓதி வருபவர்க்கு அஞ்செழுத்தும் ஐந்து வண்ணங்களாக இருந்து உனக்குள்ளேயே உகாரமாக அமர்ந்திருப்பது மெய்ப் பொருளாக விளங்கும் சிவமே என்பதை அறிந்து அஞ்செழுத்தால் தியானம் செய்யுங்கள்.
 
******************************************* 
சிவவாக்கியம்-220

அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பி
ஞ்செழுத்தின் நேர்மைதான் பிரிந்துரைக்க வேண்டுமே!!!
 
அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய்  அனாதியாய் அமர்ந்து நின்றது சிகாரமே. அதை நெஞ்சமாகிய அனாகத சக்கரத்தில் நின்று சிவயநம என செபிக்க வேண்டும். இது பஞ்சாட்சரமாக பிஞ்செழுத்து எனும் ஊமைஎழுத்தாக இருப்பதை உணர்ந்து அங்கேயே மனதை நிறுத்தி நினைவால் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவய
, வயநமசி, என ஐம்பத்தோர் அட்சரங்களாக பிரித்து செபித்து தியானிக்க வேண்டும்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

13 comments:

  1. Good Evening Sir. Thank you for the Sivavakkiyar songs with simple meaning.
    Can you please tell me where to find the meaning for rest of the Siva Vakkiyar songs? Thank you.
    ~Ananthi

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா மற்ற பாடல்களுக்கும் விளக்கவுரை கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்

    ReplyDelete
  3. சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ
    பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ
    காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ
    சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே

    ReplyDelete
    Replies
    1. பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
      இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ
      பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
      பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.
      வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்லுறீர்
      வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
      வாயில்எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
      வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே.

      ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
      மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
      மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
      ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.

      Delete
    2. https://youtu.be/vGXKaKUW57E

      Delete
  4. ஞானிகளின் பாதையில் செல்ல அருமையான விளக்கம்

    ReplyDelete
  5. சிவவாக்கியர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்த சாதி ஒழிப்பு தமிழ் போராளி

    ReplyDelete
  6. பாடல்களுக்கு விளக்கம் மிகச் சிறப்பு.
    மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!!

    ReplyDelete
  7. சிறப்பு... மிக்க நன்றி...

    ReplyDelete