Saturday, May 11, 2013

சிவவாக்கியம் (011–020)

 


ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

சித்தர் சிவவாக்கியர்.




*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 011
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சாந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள். 
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 012
கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே.
செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக  இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து  உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள். 
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 013
நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேத்று? ராம ராம ராம என்ற நாமமே

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள். 
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 014
 
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.

சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே!  உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும் போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோ? உதவாது. ஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மைப்போருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும், முத்தியும், சித்தியும் கிடைக்க மெய்பொருளை அறிந்து தியானியுங்கள். தினம் தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாத்திரங்களுக்கும் அதனால் சக்தி கிட்டி முக்திபெற்று சித்தி அடைவீர்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 015  
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு  அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். 
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள்எண்: 016
நாலு வேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆழம் உண்ட கண்டநீர் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லோவீர் கனவிலும் மஃது இல்லையே.

ரிக், யஜூர், சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நன்றாக மனப்பாடம் செய்து ஒதுவீர்கள். ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா? அமுதம் வேண்டி திருப்பார் கடலை கடையும்போது, ஆதிசேசன் கக்கிய ஆலகால விஷத்தை உண்டு அவனியைக் காத்த நீலகண்டன் நம் உள்ளத்தில் இருப்பதையும் ஞானபாதம் எனும் மெய்ப்பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற எம் பயம் கிடையாது. . அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கு கனவில் கூட எம பயமோ எம வேதனையோ இருக்கவே இருக்காது.
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள் எண் : :017
வித்தில்லாத சம்பிராதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.

பரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும், பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாது. தச்சன் இல்லாது மாளிகை அமையுமா? அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமா? நம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன், மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டு மற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!! பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!! சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே!!! இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள். 
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள் எண்:018
அஞ்சும் மூன்றும் எட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே

'நம சிவய என்ற அஞ்செழுத்தும்' , , ம் என்ற மூன்றெழுத்தும் சேர்ந்த ' ஓம் நமசிவய' என்ற எட்டெழுத்து மந்திரமே அனாதியாக விளங்கும் ஈசனின் மந்திரம், இதுவே அநாதியான மந்திரம். இதனை நன்கு அறிந்து கொண்டு நம் உள்ளமாகிய கோவிலிலே இறுத்தி நினைந்து நீங்கள் கண்ணீர் விட்டு அழுது உருக் கொடுத்து செபித்து தியானியுங்கள். எந்த ஜென்மத்தில் செய்த பஞ்சமா பாதகங்களும், பாவங்களும் அனைத்தும் இம்மந்திர செபத்தால் காற்றில் பஞ்சு பறப்பது போல் நம்மை விட்டு பறந்துவிடும். எவ்வித பழிபாவங் களையும் செய்யா வண்ணம் நம்மை நன்னெறியில் நடக்கச் செய்யும் என்று நான்கு மறைகளும் சொல்லுகின்றது. ."ஓம் நமசிவய"
*****************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை பாடல்: 019
அண்டவாசல்ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூர்கொடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏக போகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் கணவல்லரோ?

இவ்வுலகத்திற்கும் பிற உலகங்களுக்கும் ஆயிரமாயிரம் வழிகள் வாசல்களாக அமைந்திருக்கின்றது. எண் சாண் உடம்பு எண்ணாயிரம் கோடி உயிர்களிலும் கோடிக்கணக்கான வாசல்கள் கொண்டு இப்பூமியில் இலங்கி வருகின்றது. இதிலே இறைவன் பத்தாவது வாசலிலிருந்து உலாவுகின்றான். இந்த வாசல் ஏழை வாசலாகவும், ஏகமாகி நின்று இறை இன்பம் கிட்டும் வாசலாகவும் எளிமையாக எல்லோரிடமும் மறைவாக இருக்கின்றது. இந்த பத்தாவது வாசலை அறிந்து யோகா ஞானத்தால் அவ்வாசலின் பூட்டைத் திறந்து எம்பிரானாகிய ஈசன் இருக்கும் வாசலை யாவர் காணவல்லவர்கள்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை பாடல் :020
சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்
கம நோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எண்கள் ஈசனே

காலம் தவறாது நான்கு வேதங்களையும், சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும், ஒழுங்காகவும், மிக அழகாகவும், நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும், அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி  சூட்சும உடம்பில் இருப்பான் எண்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.
*****************************************************


மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே! சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைக் அவரின் 550 பாடல்கள் மற்றும் விளக்கங்களுடனும் காண வேண்டி.

http://sivavakiyar.blogspot.com  நண்பர்களே! இணைப்பினை சொடுக்கி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை மேற்கண்ட வலைப்பூவில் இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்!!! மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்...அன்புடன் கே எம் தர்மா..

2 comments: