Thursday, May 16, 2013

சிவவாக்கியம் (081-090)

சிவவாக்கியம் (081-090)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
*******************************************
சிவவாக்கியம்-081
 
மிக்க செல்வம் நீர் படைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்தி மேனி வெந்து போவது அறிகிலீர்
மக்கள் பெண்டிர் சுற்றம் மாயை காணும் இவையெலாம்
மறலி வந்து அழைத்த பொது வந்து கூடலாகுமோ?


பாவச் செயல்கள் செய்து நிறைந்த செல்வங்களைப் பெற்றும் நிம்மதி இன்றி வாழும் பாவிகளே! நீர் இறந்து போனால் சுடுகாட்டிற்கு கொண்டு போய் விறகு, விராடியினால் அடுக்கி தீ வைத்து எரித்து இவ்வுடம்பு ஒருபிடி நீரும் இல்லாது சாம்பலாவதை அறிய மறந்தீர்களே!  மக்கள், மனைவி, உறவு என்பவர்கள் யாவும் வெறும் மாயை என்பதை உணருங்கள். எமன் வந்து இவ்வுயிரை எடுத்து போகும் பொது நீ செய்த புண்ணிய பாவமின்றி வேறு யாரும் கூட வரமாட்டார்கள்.
*******************************************
சிவவாக்கியம்-082
 
ஒக்க வந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமை பெற்ற ஊரிலே
அக்கணித்து கொன்றை சூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அநேக பாவம் அகலுமே

ஒத்து வாழும் பெண்ணுடன் சிற்றின்பத்தில் ஈடுபடும்போது அதையே யோகமாக்கி பேரின்பம் அடையும் பட்டணம் ஒன்று என்றும் இளமையோடு இருக்கின்றது. அந்த இடத்தில் ருத்திராட்ச மாலையும் கொன்றை மலரையும் சூடி ஈசன் உள்ளமாகிய அம்பலத்தில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார். அவனை அறிந்து அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானம் செய்தால் செய்த அநேக பாவங்கள் யாவும் அகன்று விடும்.
*******************************************
சிவவாக்கியம்-083
 
 மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாட மாளிகைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல் கிடந்தது உயிர் கழன்ற உண்மை கண்டும் உணர்கிலீர்

மாடமாளிகைகள் கட்டி மாளிகைகள் கட்டி மாடு, கன்று போன்ற சகல செல்வங்களையும் சம்பாதித்து தம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நாட்களில், திடீரென்று விபத்தில் நடப்பது போல் எமதூதர்கள் ஒரு நொடியில் உயிரைக் கொண்டு போன பின் அவ்வுடல் பிணமாக கிடப்பதைக் கண்டும் உயிர் போனதை உணர்ந்தும் உயிரை அறியாமல் இருக்கின்றீர்கள். அவ்வுடலில் உயிராய் நின்ற ஈசன் ஆட்டுவித்த உண்மையை உணர்ந்து இரவா நிலைபெற்று இறைவனை சேர தியானம் செய்யுங்கள்.

*******************************************
சிவவாக்கியம்-084

பாடுகின்ற உம்பருக்கு ஆடு பாதம் உன்னியே
பழுதிலா கர்ம கூட்டம் இட்ட எண்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடு கொண்ட அப்பனே
நீலகண்ட காலகண்ட நித்தியா கல்லியாணனே

பரமனையே பாடுகின்ற உத்தமபக்தர்கள் இறைவனின் ஆடுகின்ற திருவடியையே தியானிப்பார்கள். குற்றமில்லாத கர்ம யோகிகள் கூட்டம் அரஹர என கோஷம் இட்டுக் கூவி நாதோபாசானையால் அழைப்பதும் எங்கள் பரமனையே. என்றென்றுமுள்ள செம்மையான பொன்னம்பலத்துள் சோதியாக நின்று நடராஜனாக ஆடல் புரியும் எங்கள் அப்பனே. நீயே ஆழம் உண்ட நீலகண்டன், நீயே காலனை உதைத்த காலகண்டன், நீயே நித்தியமுமாய் ஆனந்தம் தரும் கல்யாண குணத்தவன்.

*******************************************
சிவவாக்கியம்-085

கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையேல்
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடங்கினால்
தேனகத்தில் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே

இவ்வுடம்பை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் போது அது ஒன்றுக்கும் உதவாத ஒரு பிடி சாம்பலாகும். அது போல ஞானம் சிறிதும் இல்லா நெஞ்சம் உடையவர்களிடம் நல்லது ஒன்றும் இருக்காது. அறிவாக சுடர் விடும் சோதியை அறிந்து அங்கேயே உன் உணர்வையும், மனதையும் நிலை நிறுத்தி தியானம் செய்து வந்தால் தேனில் ஒடுங்கியிருந்த ருசியானது நாவில் ஊறுவதுபோல் ஈசனின் அருளால் ஆனந்தம் கிடைக்கும்.

*******************************************
சிவவாக்கியம்-086

பரவி ஓடி உம்முளே பறந்து வந்த வெளிதனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகி ஓடி எங்குமாய் ஓடும் சோதி தன்னுளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே

ஆகாயமாய் நமக்குள் இருக்கும் மனம் எங்கும் பரவி ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த மனத்தை குவித்து நம்மில் வெட்ட வெளியான இடத்தில் நிறுத்தி நினைவால் நினைந்து தியானம் செய்ய மனத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அது சுத்த நிர்மலமாய் ஆகும்பார்க்கும் இடமெலாம் நீக்கமற நிற்கும் சோதியை தனக்குள்ளே கண்டு பரம்பொருளையே எப்போதும் கருத்தில் வைத்து தியானியுங்கள். அதுவாகிய மெய்ப்பொருளே இறவாநிலை பெற காரணமாகும்.
*******************************************
சிவவாக்கியம்-087

சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூர்ணா
வீதியாக ஓடி வந்து வின்னடியின் ஊடுபோய்
ஆதிநாதன் என்று  அனந்த காலம் உள்ளதே.

பூரணமாகிய சோதியில் ஆண் பாதி, பெண் பாதியாக அர்த்தனாரீயாக நின்றது எது எனவும், எனக்குள் பரிசுத்தமான இடம் எது எனவும் காட்டி, எனக்கு யோகம் தியானம் செய்யும் முறைகளையும் போதித்து உபதேசித்த  மெயகுருனாதனே வாசி யோகத்தில் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் வீதி வழியாக மேலேறி சகஸ்ரதளத்தை அடைந்து வெளியாக விளங்கும் இடத்தின் அடியில் சென்று சேருகின்றது. அங்கெ சோதியாகவும், நாதனாகவும், ஆதியாகவும் ஈசன் அனாதியாக எப்போதும் இருக்கின்றான்.
*******************************************
சிவவாக்கியம்-088

இறைவனால் எடுத்த மாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமைந்ததே
கருவு நாதம்  உண்டுபோய் கழன்ற வாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர் கோடி உள்ளுளே அமைந்ததே

நமது உடம்பிலேயே சிவன் இருக்கும் சிதம்பரமாகிய ஆகாயத் தலத்தில் அறிவாக விளங்கும் சித்தத்தை அறியுங்கள். அவ்வறிவால் அமைந்த இவ்வுடலானது மண்
, நீர், தீ, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் அடுக்கடுக்காக ஆராதாரங்களாய் அமைந்து உள்ளது. தாயின் கருவினிலே புகும் விந்து நாதத்தை உண்டு உருவாக்கி ஒன்பது வாசல் கொண்ட உடலுயிர் வளர்ந்து இப்பூமியில் வெளிவுறம். அப்படிவரும் கோடிக்கணக்கான உயிர் ஒவ்வொன்றிலும் சிவனே அதனுள் அமர்ந்துள்ளார் என அறியுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-089

நெஞ்சிலே இருந்திருந்து நெருங்கி ஓடும் வாயுவை
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லிரேல்
அன்பர் கோயில் காணலாம் அகலும் எண் திசைக்குளே
தும்பி ஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!


நெஞ்சிலே இருந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணவாயுவை யோகப் பயிற்சியினால் நிறுத்தி அன்பெனும் பக்தியுடன், தியானம் செய்து, வாசியை உங்களுக்குள்ளேயே இருத்த வல்லவர்கலானால் அவ்வாசி யானது நம் பிராணனில் கலந்து இறைவன் இருப்பிடத்தை காட்டும். செய்த பாவவினைகள் யாவும் அகலும். எண்திசைகள் யாவிலும் இயங்கும் ஈசனை அறிந்துணர்ந்து, தும்பியானது ரீங்காரம் இடுவதைப் போல உனக்குள்ளே வாசியை ஓட்டி தியானம் செய்து இறைவனை அடையுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-090

தில்லையை வணங்கி நின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்து நின்ற ஏக போக மாய்கையே
எல்லையைக் கடந்து நின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிகப்புமாகி மெய் கலந்து நின்றதே!

தில்லையில் ஆடும் ஈசன் நம் உடலில் இடங்கொண்டு ஆகாய எல்லையில் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றான். வாசிக் காற்றை மேலேற்றி செய்யும் பயிற்சியினால் அவ்வாசியானது ஈசனை வணங்கி அவனுடன் சேர்க்கின்றது. மனமெனும் எல்லையைக் கடந்து ஏகமாக நின்று எல்லா இன்ப போகங்களையும் அடையச் செய்வது மாயையே. மனமே வாசியாகி எல்லையாக
விருக்கும் ஆகாயத்தையும் கடந்து இறையைச் சேர்வதுவே ஆனந்தம். அவ்விறையையே உயிராக வெள்ளையும் சிகப்புமாக நம் உடலில் மெய்ப்பொருளாக நின்றது. 
 *******************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

 

No comments:

Post a Comment