Thursday, May 16, 2013

சிவவாக்கியம் (061-070)

சிவவாக்கியம் (061-070)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
********************************************************************************
சிவவாக்கியம்061

அறத்திறங்களுக்கும் நீ அகண்டம் என்திசைக்கும் நீ
திறதிறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே


ஈஸ்வரா! தர்மகாரியங்கள் யாவும் நீ, அகண்டங்கள் அனைத்துக்கும் எட்டு திசைகளுக்கும் காரணமானவன் நீ. உன்னை அடைய வேண்டும் என்று தேடுவோர்களின் சிந்தையிலும் மெய்யறிவாகவும் உள்ளவன் நீ. மெய் ஞானா விஞ்ஞானத் திறன்களுக்கும் அதில் ஆராய்ந்து சாதிக்கும் திறமைகளுக்கும் காரணம் நீ. தூக்கத்தில் கிடைக்கும் சுகம் நீ. உன்னை உணரும் உணர்வும் நீ ஏன் உடலில் உட்கலந்து நிற்கும் சோதியும் நீ. கனவிலும், நனவிலும் மறக்கக் கூடாத நின் திருவடியை அடியேன் அறியாது மறந்து போனாலும் ஏன் உடலாகிய வீட்டில் மனத் தாமரையில் வந்து குடியிருந்து ஆண்டு கொள்.
********************************************************************************
சிவவாக்கியம்-062

அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மன்றுளே புனருகின்ற புண்ணியர்
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே.


நாராயணா! இவ்வுலகம் நீ அகண்டங்கள் யாவும் நீ. முதலையின் பிடியில் அகப்பட்ட கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அபயக்குரலிட்டு அலற அதனைக் காத்து ரட்சித்து அனைத்துக்கும் ஆதிமூலமாக ஆனவன் நீ. ஆபத்து வரும் காலத்தில் காப்பவன் நீ. ஏன் கருத்தினுள்ளே தெளிவாகத் திகழ்பவன் நீ. இதிகாச காவியங்களான மகாபாரதத்தின் நாயகன் நீ. ஆயிரம் இதழ் தாமரையான சகஸ்ரதளத்தில் நின்று யோக தியானம் செய்யும் புண்ணியோர்கள் புண்டரீகம் எனும் மைப் பொருளில் சேர்ந்து அதிலேயே தவ்வக்கோலம் பூண்டிருப்பர். நடுவாக அமைந்த கூர்மையொத்த இடத்தில் உன்னைக் கண்டு ஆனந்தம் பெற்று உன்னுடைய கூர்ம அவதாரத்தை எண்ணி ஆமையைப் போல் ஐம்புலன் களை உள்ளடக்கி சமாதி எண்டும் பேரின்ப நிலையை அடைவார்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்-063

மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே

மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்-064

கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்று நீர்
திருவளங்கு மேனியாகிச் சென்று கூடலாகுமே

பெண்களின் மீதுள்ள சிற்றின்ப ஆசையால் ஆழிவில் ஏற்படும் பல துன்பங்களாலும், நோய்களாலும் பாதிக்கப் பட்டு வெளியில் சொல்ல முடியாமல் கலங்கித் தவிக்கும் ஊமை மக்களே!! நல்ல குருவாக இருந்து வாழ்ந்து காட்டியவர்கள் சொன்ன உபதேச வார்த்தைகளை நன்கு புரிந்து கொண்டு அந்த ஒன்றையே குறித்து நோக்கி தியானம் செய்ய வல்லவர்க ளானால் அருவாக இருந்த அப்பொருளே உருவாக இலங்கி சோதி மேனியாகி நின்ற ஈசருடன்.ஒன்றாகி இணைக்கும். அதுவே உங்களை உத்தமராக ஆக்கி உள் தமரைத் திறந்து ஈசன் திருவாக விளங்கி திகழும் பொன்மேனியில் பொன்னம்பலத்தில் சென்றுகூடி பேரின்பத்தை கூட்டி வைக்கும்.
********************************************************************************
சிவவாக்கியம்-065   

தீர்த்தம் ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயம் அஞ்செழுத்துமே.
 
தலம் , தீர்த்தம், மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள். 
********************************************************************************
சிவவாக்கியம்-066

கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்து நீர்
பழ்த்தவாய் விழுந்து போன பாவமென்ன பாவமே
அழுத்தமான விதத்திலே அனாதியாய் இருப்பதோர்
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே  

கழுத்தையும் நிமிர்த்து அலறிக் கொண்டே நல்ல கண்களையும் விழித்துக் கொண்டே பாம்பின் வாய் அகப்பட்ட தவளையைப் போல் நீங்கள் மரணத்தின் வாயில் அகப்பட்டு இம்மாய வாழிவில் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன பாவமோ!! ஒ மனிதர்களே!! இந்த மாயப்பொய் வால்ழ்வு பான்பின் வாய் வீழ்ந்து இரையாகும் தவளைப் போன்று நாம் சிறிது சிறிதாகச் சாவதாக அல்லவா? அமைந்துள்ளது. இப்படிப்பட்ட இம்மரணத்தை வென்று மீண்டும் பிறவாதிருக்க நம் ஆன்மாவில் அழுத்தமான வித்தாக விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அது அனாதியாய் உள்ள ஒரேழுத்தாக இருப்பதை அறிந்து அந்த உணர்வுறு   மந்திரத்திலேயே மனதை நிறுத்தி வாசியாய் இருத்தி தியானம் செய்து வாருங்கள். மாயை நீங்கி சிவத்தோடு என்றும் இருக்கலாம். 
********************************************************************************
சிவவாக்கியம்--067
 
கண்டுநின்ற மாயையும் கலந்து நின்ற பூதமும்
உண்டுறங்கு மாறு நீர் உணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டை ஆறும் ஒன்றுமைய்ப் பயந்த வேத சுத்தராய்
ஆண்ட முத்தியாகி நின்ற ஆதிமூலம் ஆவீரே.

இவ்வுலக வாழில் மாயையான உடம்பில் கலந்து நின்ற பஞ்சபூதங் களையும் கண்டு தியானித்திருங்கள். உண்பதையும் உறங்குவதையும் அனுபவித்து அறிவது போல் உங்களுக்குள் உள்ள உண்மைப் பொருளை உணர்ந்து அதிலேயே மனதை நிறுத்தி தியானித்திருக்க வல்லவர்களா னால் ஆறு ஆதாரங்களும் ஒன்றாக ஆகி வேதங்கள் கூறும் பரிசுத்தமான இடத்தில் மெய்ப்பொருள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்டாலே இந்த அண்டத்தில் முக்தி அடையலாம். அதிலேயே நின்று யோக சாதகத்தால் மூன்று  தீயையும் இணைத்து தவம் புரிந்தால் ஆதிமூலமான அப்பரம் பொருளை அடைவீர்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்-068

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை 
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே.

மூலநாடியான சுழுமுனையில் வாசியோகம் செய்து அதனால் வரும் நாத சப்தத்தால் அங்கெ தோன்றி எழுந்த சோதியில் மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து நாடி செய்து தவம் புரியும் யோக  ஞான சாதகர்கள் என்றும் இளமையோடு பாலனாக வாழ்வார்கள். அதன் பலனாய் அவர்களே பரப்பிரமமாய் அவார்கள்  இது  ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும் அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் என்று சொல்கின்றேன்
********************************************************************************.
சிவவாக்கியம்-069

ஈன்ற வாசலுக்கே இரங்கி எண்ணிறந்து போவீர்காள் 
கான்ற வாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லிரேல்
தோன்ற மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே

பெண்கள் மேல் கொண்ட மையலினால் அவர்களுக்கு இரங்கி வாழ்நாள் முழுதும் உழைத்து இளைத்து மாண்டு போகின்ற மனிதர்காள்! வாழையடி வாழையாக வாழைமரம் கன்று ஈன்றதாயும் பூ பூத்து காய்க்கும் காரணத்தை அறிவீர்களா!! மனிதர்களுக்கும் வாழைக்கும் நீரே வித்தான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நந்தியின் வாசலைத் திறந்து மெய்ப்பொருளையே நாடி நோக்கியிருந்து தியானித்திருக்க வல்லவர் ஆனால் மனத்தினால் தோன்றுகின்ற மாயைகள் யாவும் நம்மைவிட்டு ஒழிந்து நம்முள் அருட்பெரும் ஜோதியாக ஈசன் வந்து தோன்றுவான்.
********************************************************************************
சிவவாக்கியம்-070

உழலும் வாசலுக்கு இறங்கி ஊசலாடும் ஊமைகாள்  
உழலும் வாசலைத் துறந்து உண்மை சேர எண்ணிலிர்
உழலும் வாசலைத் துறந்து உண்மை நீர் உணர்ந்த பின்
உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே!!

வீடு மனைவி மக்கள் செல்வம் என்று அதற்காகவே அலைந்து உலக வாழ்வில் இன்ப துன்பங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஊமை மக்களே! நம்மை மீண்டும் பிறவிப்பிணியில் ஆட்படுத்தி உழலும் அந்த வாசலைத் துறந்து உண்மையை உணர்ந்து மெய்ப்பொருள சேர்ந்து மீதும் பிறவா நிலை பெற எண்ணம் வையுங்கள்.  அனைத்தையும் துறந்து அவனே கதியென சரணடைந்து தன்னைத் தான் அறிந்து தனக்குள்ளேயே இறைவன் இருக்கும் உண்மையை உணர்ந்து தியானியுங்கள் நம்மில் இருக்கும் பத்தாம் வாசலில் உள்ளிருந்து உழலும் சோதியான மெய்ப் பொருளையே பற்றி இருங்கள் நீயே அதுவாகிய பெருன்மையாக ஆவீர்கள்
********************************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment