Friday, May 10, 2013

சித்தர் சிவ வாக்கியர் சரிதம்-பாகம்-2

 
சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார். 
ஆதியே துணை 
ஓம் நமசிவய சிவாய நம ஓம்

சிவ வாக்கியர் :

இல்லறத்தில் இணைதல்:- குருவின் கட்டளையை நிறைவேற்ற அவர் கொடுத்த ஆழாக்கு மணலையும் பேய்ச்சுரைக்காயையும் எடுத்துக்கொண்டு தன் இல்வாழ்க்கைத் துணையைத் தேடி தெற்கு திசை நோக்கி பயணமானார். சித்தரின் அழகில் வயப்பட்ட பல இளம் பெண்களும் அவரை மணக்க விரும்பினர். ஆனால் சித்தரின் நிபந்தனை கேட்டு ஆழாக்கு மணலை எவ்வாறு சமைத்து உணவு படைப்பது எனப்  புரியாமல் தயங்கினார்கள். இப்படியே ஒவ்வொரு ஊராக அலைந்து கொண்டிருந்த சிவவாக்கியர், ஒரு நாள் வீட்டின் முற்றத்தில் மூங்கில் கூடை பின்னிக் கொண்டிருந்த ஒரு குறப் பெண்ணைக் கண்டார்.
கண்டவுடனேயே இவள்தான் தான் தேடி வந்த பெண் என்று உள்ளுணர்வு உணர்த்தப் பெற்றார். . உடனே தனிமையில் வேலை செய்து கொண்டிருந்த அப்பெண்ணை நோக்கி சென்றார். .அக்குற மாதும் சித்தரைக் கண்டு நாணி இன்முகத்தோடு வரவேற்று அமரச் சொல்லி அருந்த தண்ணீர் கொடுத்தாள். சிவவாக்கியரும் அப்பெண்ணிடம் தான் கொண்டு வந்த மணலையும் பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து இதனை எனக்கு சமைத்து உணவு படைத்து தர உன்னால் முடியுமா? என அன்புடன் கேட்டார். அக்குறப்பெண்ணும் மறுப்பேதும் சொல்லாமல் இதோ ஒரு நாழிகைக்குள் உணவு படைக்கிறேன் எனக்கூறி அந்த ஆழாக்கு மணலையும் பேய்ச் சுரைக்கயையும் கழுவி சமையல் செய்ய ஆரம்பித்தாள். . .அவள் அடுப்பைப் பற்ற வைத்து சமையல் செய்கையில் அதிசயமான முறையில் மணல் அருமையான சாதமாகவும், பேய்ச்சுரைக்காய் ருசி மிகுந்த கூட்டுக் குழம்பாகவும் மாறி மனம் வீசியது. . இதனை வியப்புடன் பார்த்துக் கொண்டு காத்திருந்த சித்தருக்கு, இலையில் பரிமாறி சாப்பிட அழைத்தாள். . சிவவாக்கியரும் இன்முகத்தோடு அமர்ந்து சுவைத்துச் சாபிட்டார்.

பின் இவள்தான் நம் குருநாதர் சொல்லிய இல்வாழ்க்கைத் துணை என்பதை அறிந்து அவளை மணமுடிக்க எண்ணம் கொண்டு அவளின் தாய், தந்தையரைப் பற்றி விவரங்களைக் கேட்டார். . அப்பெண் கூடை முறம் பின்ன மூங்கில் வெட்டுவதற்காக அவர்கள் சென்றுள்ளனர் என்றும் அவர்கள் திரும்பி வரும் நேரம்தான் இது எனவும் பதிலுரைத்தாள். . அவள் சொன்னது போலவே தொலைவில் அப்பெண்ணின் பெற்றோர்கள் குடிசைக்கு வந்து கொண்டிருந்தனர். .அவர்கள் சுமையை இறக்கி வைத்து தங்கள் வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிவவாக்கியரைப் பார்த்து திகைத்த வண்ணம் வணங்கி சுவாமி தாங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என்று பயத்துடன் கேட்டனர். . சிவவாக்கியர் அவர்களின் அச்சத்தைப் போக்கி தன்னைப் பற்றி எடுத்துரைத்து, தான் இங்கு வந்த விவரத்தையும், நடந்தவைகளையும் கூறி தவம் செய்யும் எனக்கு துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன், .இவளே என் குருநாதர் கூறியகுணவதி, . ஆகவே இவளை தங்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து தர வேண்டும் என பணிவுடன் கூறி வேண்டினார். .  

மகளின் விருப்பத்தை அறிந்துகொண்ட பெற்றோர் ஐயனே தங்களைப் போன்ற ஒரு சித்தபுருஷருக்கு என்மகளைத் திருமணம் செய்து கொடுப்பது எங்கள் பூர்வ புண்ணிய பாக்கியமே. !ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்கள்குலவழக்கப்படி நீங்கள் இங்குதான் வாழவேண்டும். .எங்கள் குலவழக்கத்திற்குகட்டுப்பட்டு எங்கள் கூட்டத்தில் சேரவேண்டும். இவைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எங்கள் மகளை தங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கின்றோம். தங்களுக்கு சம்மதமா எனக் கேட்டனர். . சிவவாக்கியரும் குருவின் கட்டளைப்படி இல்லறக்கடன் முடிக்க அவர்கள் கூட்டத்திலேயே சேர்ந்து வாழ ஒத்துக் கொண்டார். அதன்படியே ஒரு நல்ல நாளில் அவர்கள் குல வழக்கப்படி இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. குறவர் குலகூட்டத்தி லேயே  தங்கி இல்வாழ்வை இனிதாக நடத்தி வந்தார் சிவவாக்கியர் . சித்தருக்குரிய ரிஷி பத்தினியாக வாழ்ந்து வந்தாள் அந்த குறமாது சிவவாக்கியர் தான் ஜனித்ததிலிருந்தே ஓதி வரும் சிவபஞ்சாட்சர மந்திரத்தையும் குரு உபதேசித்த யோகா ஞானத்தையும் செவ்வனே  செய்து தவம் புரிந்து வந்தார். . இல்லறம் நடத்த காட்டிற்கு சென்று மூங்கில் வெட்டி எடுத்து வந்து குறவர்களைப்போல் கூடை, முறம் போன்ற வைகளைச் செய்து அதனைச் சந்தையில் விற்று நிறைவாக இல்லறம் நடத்தி வாழ்ந்து கொண்டிருந்தார். இவ்வாறு இல்லறத்தையும், ஆன்மீகத்தையும் இரு கண்களைப் போல் கருதி காத்து வந்தார் சிவவாக்கியர்.

ஆட்கொல்லி

ஒருநாள் சிவவாக்கியர் காட்டிற்கு மூங்கில் வெட்டி எடுத்துவர சென்றார். . அவர் ஒரு மூங்கிலை வெட்டியபோது அதிலிருந்து தங்கத் துகள்கள் தகதகவென மின்னிக் கொண்டு, கொட்டிக் கொண்டே இருந்தது. . அதனைப் பார்த்த சிவவாக்கியர், ஐயோ! ! ஆட்கொல்லிஆட்கொல்லி, என அலறியபடியே ஓடி வந்தார். வழியில் இவரைக் கண்ட நான்கு இளைஞர்கள், ஆட்கொல்லி ஆட்கொல்லி என கத்தியபடியே ஓடி வந்த சித்தரைப் பிடித்து நிறுத்தி என்ன விவரம்? ஏன் இப்படி ஓடி வருகின்றீர்கள்? என விசாரித்தனர். . இவரோ அங்கெ ஆட்கொல்லி கொட்டிக்கொண்டே இருக்கிறது, என அஞ்சியபடியே சொல்லிக் கொண்டிருந்தார். .நான்கு நண்பர்களும்இவரை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை சென்று பார்க்கையில் வெட்டப்பட்ட மூங்கிலில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரும் அவ்விடத்தை விட்டு திரும்பி வந்து, ஆமாம் சித்தரே அது ஆட்கொல்லிதான். நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் தைரியமாக வீட்டிற்குச் செல்லுங்கள் எனக் கூறி சிவவாக்கியரை அவ்விடத்தைவிட்டு அனுப்பி வைத்தனர்.

சிவவாக்கியரும் அது ஆட்கொல்லி, ஆட்கொல்லி எனச் சொல்லி எச்சரித்துவிட்டு, அனைத்தும் சிவன் செயலே எனக் கூறி வீடு திரும்பினார். அவர் சென்றதைக்  கண்ட அந்நால்வரும் அரவமற்றதும் அங்கிருந்த தங்கம் முழுவதையும் ஒரே மூட்டையாகக் கட்டி, ஒரு பாழும் கிணற்றின் அருகே இறக்கி வைத்தனர். நடுநிசிக்குப்பின் யாருக்கும் தெரியாமல் நம் வீட்டிற்கு இதைக் கொண்டு சென்று, நான்கு பங்காக பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து காத்துக் கிடந்தனர். நான்கு இளைஞர்களுக்கும் பசி வந்து துன்புறுத்தியது. அதனால் இரண்டு பேர் ஊருக்குள் சென்று பசியாறிவிட்டு, மற்ற இருவருக்கும் சாப்பாடு வாங்கி வருமாறு முடிவு செய்து, இருவர் காவல் காக்கவும் இருவர் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு வாங்கி வரவும் சென்றனர். "விநாச காலே விபரித்த புத்தி"என்பதைப் போல ஊருக்குள் சென்று உணவருந்திய இருவரும் தங்கத்தின் மேல் கொண்ட ஆசையினால் விபரீத புத்தி ஏற்பட்டு காவலிருப்பவர்களுக்கு வாங்கிய சாப்பாட்டில் கொடிய நாகத்தின் விஷத்தை கலந்து எடுத்து வந்தனர் . அவர்கள் நஞ்சு கலந்த உணவை உண்டு மாண்டபின் தங்கத்தை நாம் இருவரும் பங்கு போட்டு எடுத்துக்கொண்டு வளமுடன் வாழலாம் என மனக் கணக்குப் போட்டு வந்தார்கள். தங்க மூட்டைக்கு காவலிருந்த இருவருக்கும் இதே போல கேட்ட எண்ணம் ஏற்பட்டு சாப்பாடு கொண்டு வரும் நண்பர்கள் இருவரையும் எப்படியாவது தந்திரமாக கொன்று விட்டு நாமே எல்லாத் தங்கத்தையும் பங்கு போட்டுக் கொள்ளலாம் எனத் திட்டம் தீட்டினர்.

சாப்பாடு வாங்கி வந்த நண்பர்கள் இருவரையும் பக்கத்தில்உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துவரக் கூறினர் .தண்ணீர் எடுக்க அப்பாழுங் கிணற்றினுள் எட்டிப் பார்க்கையில் அவர்கள் அறியாவண்ணம் பின்வந்து அவர்களை, அப்பாழுங் கிணற்றினுள் தலைகுப்புறத் தள்ளி விட்டார்கள். .சாப்பாடுகொண்டுவந்த நண்பர்கள் இருவரும் கிணற்றில் அடிபட்டு அப்போதே மாண்டு போனார்கள். . பின் இவர்கள் இனி தங்கம் முழுமையும் நமக்குத்தான் என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே பசி வருத்த, இறந்தவர்கள் கொண்டு வந்த நாக நஞ்சு கலந்த உணவை உண்டனர். .உண்டு முடித்தவுடன் வாயில் நுரை தள்ளியபடியேநஞ்சு தலைக்கேறி அங்கேயே வீழ்ந்து இறந்து போனார்கள். .காலையில் எப்போதும்போல் மூங்கில் வெட்ட வந்த சிவவாக்கியரும் அவரது துணைவியாரும் இறந்து கிடந்த நால்வரையும் தங்க மூட்டையையும் கண்டனர். . சிவவாக்கியர் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, தம் மனைவியிடம் நான் அப்போதே இவர்களிடம் சொன்னேன் இது ஆட்கொல்லி என்றுகேளாமல் இறந்து கிடக்கின்றனர் என்றார்.

சிவவாக்கியரின் மனைவி என்ன செய்வது எனக் கேட்க, சிவவாக்கியர் இது இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ எனக்கூறி அக்காட்டிலேயே ஒரு பெரிய குழியினைத் தோண்டி யாருக்கும் தெரியாமல் அத்தங்க மூட்டையை அக்குழியில் போட்டு மூடினார். தேவையான மூங்கிலை வெட்டி எடுத்துகொண்டு தங்கள் வீட்டிற்கு இருவரும் திரும்பினர். வீட்டிற்கு வந்ததும் தம் மனைவியிடம் சிவவாக்கியர், என்னம்மா உனக்கு தங்கத்தின் மீது ஆசையுள்ளதா? எனக் கேட்டுக் கொண்டே கொல்லைப்புறம் அழைத்துச் சென்றார். . பின் அங்கிருந்த குட்டிச்சுவர் மீது சிறுநீரைப் பெய்தார். .உடனே அந்த மண் சுவர்முழுவதும் பொன்னாகி மின்னியது.   அம்மா உனக்கு வேண்டிய பொன்னை எடுத்துக்கொள்என்றார். . சிவவாக்கியரின் மனைவியோ சிறிதும் சலனமின்றி சுவாமி ! தங்கள் மனைவியான எனக்கு தங்கள் சொல்லே வேதம், அடியவளுக்கும் இது ஆட்கொல்லிதான், தங்கள் அன்பையும், தங்களுக்கு செய்யும் பணிவிடைகளையும் தவிர இவ்வுலகில் எனக்கு வேறெதுவும் வேணாம் என்று பதிலுரைத்தாள். .தனது மனைவி பக்குவப்பட்டவள்என்பதில் பூரண திருப்தி கொண்ட சிவவாக்கியர் மன மகிழ்ச்சியுடன் தம் மனைவியுடன் வாழ்ந்திருந்தார்.

சித்தர்களுடன் இணைதல்:-

சிவவாக்கியரின் ஞானத்தையும், தவத்தையும் கேள்வியுற்று அறிந்த கொங்கணச் சித்தர் இவரைச் சோதிக்க எண்ணி சிவவாக்கியரைக் காண வந்தார். .சிவவாக்கியரைக்கண்டு அளவளாவி மகிழ்ந்து, தன் ரசவாத வித்தையால் அரும்பாடுபட்டு செய்து முடித்த குளிகையைக் காண்பித்து இது காணிப் பொன் பெறும் என்றார். சிவவாக்கியர் உடனே தம் உடம்பிலிருந்து அழுக்கைத் திரட்டி எடுத்து இது கோடிப் பொன் பெறும் என்று சொல்லி கொங்கனரிடம் கொடுத்தார். ரசவாத வித்தையில் சித்தி பெற்று சிறந்தவரான கொங்கணச் சித்தரும் அவ்வழுக்கைப் பரிட்சித்துப் பார்த்து வியப்படைந்து, ஆம், ஆம் இது கோடிப் பொன் பெறும் என்பது உண்மையே! சிவவாக்கியர் தன் உடம்பையே அழியாக் கற்பமாக மாற்றியுள்ளார் . அவருடைய யோக ஞானமும் தவ வலிமையையும் சித்தர்களால் பாராட்டப்பட வேண்டியதே என்று புகழ்ந்துரைத்தார். .இதன்பின் சிவவாக்கியரும் கொங்கன சித்தரும் சிறந்த நண்பர்களாயினர் .
====================================== தொடரும்...

மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே! சித்தர் சிவவாக்கியரின் வாழ்க்கை வரலாற்றினை காண வேண்டி. 

3 comments:

  1. சிவவாக்கியர் பற்றி படித்து இன்புற்றேன். சித்தர்களுக்கு அனைத்துமே சமம்தான். அவரின் சரிதமும் அழகாக எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களு இனிய நண்பரே ஜெயச்சர் அவர்களே!!! பதிவுகள் உடன் கூகுள்+ லும் டிவிட்டரிலும், முகநூல் பக்கங்களிலும் பகிர்வு செய்யப் படுகின்றன. கண்டு, படித்து, களித்து கருத்துக்களைப் பதிவு செய்யவும். அன்புடன் கே எம் தர்மா...

      Delete
  2. ungal blog migavum payan ullathaga ullathu. ungal sevai thodara en valthukal

    ReplyDelete