Tuesday, May 28, 2013

சிவவாக்கியம் (101-110)

சிவவாக்கியம் (101-110)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-101

மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
மூன்றும் அன்ஜெழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும் மண்டலத்திலே சொல்ல எங்கும் இல்லையே.


ஓம் என்ற ஓங்காரத்தில் ஒன்பது வகையான சூரியன், சந்திரன், அக்னி, நட்சத்திரம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என அனைத்தும் தோன்றியது. இதனை மூவர்களும், தேவர்களும் தேடினார்கள். அது அ, உ,  ம் என்ற மூன்றேழுத்தாகவும், 'நமசிவய' அன்ஜெழுத்தாகவும் அனைத்தும் அடங்கிய ஒரேழுத்தாகவும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த ஓங்காரமே நமையீன்ற தாய், தந்தையாகவும், நாத விந்தாகவும் இயங்கி  வருகின்றது. அதுவே மூன்று மண்டலத்திலும் , , ம் என்ற எழுத்தாக இருந்து வருகின்றது. இந்த ஓங்கார உட்பொருளையும் ஒரேழுத்து உண்மையையும் சொல்ல எங்கும் யாரும் இல்லையே. ஆதலால் ஓங்காரத்தின் அனுபவ உண்மைகளை அனைவரும் அறிந்து தியானியுங்கள்.
 
*******************************************
சிவவாக்கியம்-102

சொருகின்ற பூதம் போல் சுனங்குபோல் கிடந்த நீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே
சீருன்கின்ற ஐவரைச் சிணுக்கறுக்க  வல்லீரேல்
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவீரே!

உண்ணும் உணவின் சக்தியினால் பஞ்சபூதங்களால் உருவான சுக்கிலமானது விந்து பையில் சேருகின்றது. அதனை காம வேட்கையால் நாறுகின்ற சாக்கடையில் வீழ்ந்து எழுவதைப் போல சிற்றின்பத்தில் விரும்பி வீணாக்கும் மூடர்களே! காமத்தைத் தூண்டும் ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, வாசி யோகத்தால் அந்நீரை அனலாக மாற்றி, மேலேற்றி காம கோபத்தை அறுக்க வல்லவர்களானால் மனிதர்களில் கோடியில் ஒருவராகி ஆறு ஆதாரங்களையும் கடந்து ஒன்றாக ஒளிரும் சோதியாக ஆவீர்கள்.
*******************************************
சிவவாக்கியம்-103 
 
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டறக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்து எம்பிரானை நாம் அறிந்தபின்

பிரம்மம் உனக்குள்ளே வட்டமாக நின்று ஆட்டுவித்து வெளியான ஆகாயத்தில் திகழ்கிறது. 'ஓம்நமசிவய' எனும் எட்டு அட்சரத்துக்குள்ளே தான் ஐம்புலன் அடக்கமும் தியான ஒடுக்கமும் நிறைந்துள்ளது. எண்சான் உடம்பில் எட்டாகிய அகாரத்தில் எட்டுத் திசைகளாகவும், பதினாறு கோணமுமாக இயங்கும் வெட்டாத சக்கரத்துளே சோதியாக உதிப்பவன் ஈசன். நாம் இதனை நன்கு அறிந்து அந்த இடத்திலேயே 'ஓம்நமசிவய' என்று ஓதி தியானிப்போம்
.
*******************************************
சிவவாக்கியம்-104
 
பெசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே
ஆசையான ஐவரும் அலைத்தலைகள் செய்கிறார்
ஆசையான ஐவரை அடக்கி ஓர் எழுத்திலே
பெசிடாது இருப்பிரேல் நாதன் வந்து பேசுமே

மனசாட்சியாக இருந்து பேசுபவன் ஈசன், உனக்குள் பிரமத்தை அறிந்து ஞானம் பெற்று தியானம் செய்யுங்கள். ஆசைகள் ஐம்புலன்களால் வெளிப்பட்டு ஞானமடைய தடை செய்து, நம்மை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன. அவ்விச்சையை விட்டு ஐம்புலன்களையும் அடக்கி ஒரேழுத்திலேயே மனதை நிறுத்தி மௌனமாக இருந்து தவம் செய்து வந்தால் உள்ளிருக்கும் ஈசனே குருநாதனாக வந்து பேசுவான்.
*******************************************
சிவவாக்கியம்-105
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
நமசிவாய உண்மையை நன்கு உரை செய் நாதனே

'
நமசிவய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அனுதினமும் உபாசித்து வந்தால் எல்லா வளமும் நலமும் மேலான நிலைகளும் கிடைக்கும். நமசிவாய எனும் அஞ்செழுத்தே பஞ்சபூதங்கலாகவும், புராணங்களாகவும், மாயையாகவும் அமைந்துள்ளது. இந்த அஞ்செழுத்து நமக்குள்ளேயே ஆறாதாரங்களிலும், பஞ்சாட்சரமான மெய்ப்பொருளாகவும் இருப்பதை அறிந்து அது எப்போதும் நித்தியமாய் உள்ளது என்பதை உணர்ந்து நமசிவாய! உண்மையை நன்றாக உபதேசியுங்கள் குருநாதரே!!
*******************************************
சிவவாக்கியம்-106
 
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இல்லை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திடக் கடவதும்
சிரம் உருகி ஆர்த்தலும் சிவபிரானே என்னலும்
உரம் எனக்கு நீ அளித்த ஓம் நமசிவாயவே!!!

நீயே பரம்பொருள் என அறிந்து என் உடல், பொருள், ஆவியை உனக்கே என ஒப்படைத்துவிட்டேன். . அதனால் எனக்கு வேறு பயம் ஏதும் இல்லாதிருக்கிறேன் பராபரனே. உன்னை தினமும் கைக்கூப்பி வணங்கிடவும், மெய் பக்தியினால் சிரம் உருகி கண்ணீர்விட்டு ஆர்த்தார்த்து அழுதிடவும், எந்நேரமும் என் பிராணனை சிவசிவ என வாசியிலேற்றி தியானித்திடவும், என் உயிருக்கும், உடலுக்கும் உறுதுணையாக வந்து நான் வாழ உரமாக இருப்பது நீ எனக்கு உபதேசித்த 'ஓம்நமசிவய' என்னும் மந்திரமே.

*******************************************
சிவவாக்கியம்-107

பச்சை மண் பதுப்பிலே புழுபத்திந்த வேட்டுவன்
நிச்சலும் நினைத்திட நினைந்த வண்ணம் ஆயிடும்
பச்சாமன் இடிந்து பொய் ப்றந்ததும்பி ஆயிடும்
பித்தர்காள் அறிந்துகொள் பிரான் இயற்று கோலமே!

தும்பியான குளவியானது ஈரமான மண்ணைக் கொண்டு அழகிய கூடுகட்டி உணர்வுள்ள புழுவை வேட்டையாடி கொண்டு வந்து அடைக்கும். பின் எந்நேரமும் தன்னைப் போல் மாற்றுவதற்கு ரீங்கார ஓசையுடன் கொட்டிக்கொண்டே இருக்கும். இப்படி ஒரே நினைவோடு செய்யும் அதன் செயலால் அப்புழுவானது குளவி நினைத்தவாறே குளவியாக மாறிவிடும். அற்ப உயிராக இருந்த புழு குளவியாகி அக்கூட்டை உடைத்துக்கொண்டு தும்பியாக பறந்து செல்லும். இதனை அறிந்து கொண்டு ஒரே நினைவோடு பிராணனை இறைவனோடு இணைக்க தியானம் செய்யுங்கள். ஈசன் நடத்தும் நாடகமே எல்லாம் என்பதை உணருங்கள்.
*******************************************

சிவவாக்கியம்-108
 
ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
 
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!

வெளியில் காசிமாகரில் ஜோதிர்லிங்கமாக இருப்பவன் விஸ்வநாதன். நம் உடம்பில் ஒளிவீசும் இடமான புருவமத்தியையே கங்கை ஆறு ஓடும் காசி எனப் புகலப்படும். அவ்விடத்தில் ஈசனை கன்டு தியானம் செய்பவர், வெட்ட வெளியாக சோதிமேனி கொண்டு விளங்கும் விஸ்வநாதனாக காட்சி தருவான். அங்கு இடகலையும், பிங்கலையும்  இணைந்து  சுழுமுனையில் வாசியை ஏற்றி இறக்கி நிறுத்து தியானிப்பதற்கு எளியதான மந்திரம் இராம நாமமே
*******************************************
சிவவாக்கியம்-109
 
விழியினோடு புனல் விளைந்த வில்வவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவு நின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள் மூல வித்தையும்
தெளியும் வல்ல ஞானிகாள் தெளிந்திருத்தல் திண்ணமே

கண்களில் கண்ணீர் சிந்தி அன்பால் விளைந்த கரும்புவில்லைக் கொண்ட மனோன்மணி ஆத்தாளை ஐந்தாவது யோனியில் பிறந்து அறிந்து கொள்ள வேண்டும். வெளியிலே அவள் சக்தியை உணராமல் எப்படி வேண்டுமானாலும் பிதற்றலாம். ஆனால் அவளுடைய அருட்செயல்களால் ஏற்படும் விளைவுகள் யாவும் எப்போதும் நிற்பதில்லை. பரந்து காணப்படும் ஆகாயம் நம் மனமாக இருப்பதை அறிந்து தன் ஆன்மாவில் மூல வித்தாக ஈசன் மெய்ப்பொருளாக இருப்பதை உணர்ந்து தெளிந்த ஞானிகள் திண்ணமாக தியானத்தில் இருப்பார்கள்  .

*******************************************
சிவவாக்கியம்-110

ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
ஓம் நமசிவாயமே உணர்ந்து மெய் அறிந்தபின்
ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே!


ஓம் நமசிவாய என்பதை நன்றாக உணர்ந்து அதை நம் உடலில் உணர்ந்து கொள்ள வேடும். ஓம் நமசிவாய என்பது என்ன என்பதை எல்லாம் உணர்ந்து அதன் மெய்யான தன்மைகளை சிந்தித்து தெளிந்து கொள்ள வேண்டும். ஓம் நமசிவாய என்பது நம் உடம்பில் உயிராக உள்ள மெய்ப்பொருளே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்படி அனைத்துமாய் இருக்கும் பஞ்சாட்சரம் நம் உடம்பிலும், உயிரிலும் கலந்து நிற்பதை ஓம் நமசிவாய என ஓதி தியானியுங்கள்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment