Tuesday, May 14, 2013

சிவவாக்கியம் (031–040)

 
சித்தர் சிவவாக்கியர்.  
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
**************************************
சிவவாக்கியம்-031

நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்பமொடு  நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளுமின்
நெருப்பும்  நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல்
சர்க்கம்  அற்ற சோதியை தொடர்ந்து கூடல் ஆகுமே!
நாள்தோறும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு நெருப்பை மூட்டி அதில் நெய்யை வார்த்து வேதங்களை ஓதும் வேதியர்! அந்த வேதங்கள் சொல்கின்ற மெய்பொருளை உணருங்கள். சிகாரமாக அதை "சிவயநம" என்ற பஞ்சாட்சரத்தால் நினைத்து கூறி வந்து தியானிப்பவர்களானால் அம்மெய்ப் பொருள் சுருக்கமே அற்ற சக்தியாக இருப்பதை உணருங்கள். இதனை முறையாக தொடர்ந்து செய்து வந்தால் சோதி நிலைத்து ஈசன் அருள் பெற்று அவனோடு சேர்ந்து வாழலாம். 
*****************************************
சிவவாக்கியம்  -032

பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை 
நாட்டில்லாத நாதனை நாரிபங்கன் பாகனை 
கூட்டிமெல்ல வாய் புதைத்து குணுகுனுத்த மந்திரம் 
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே.

பாட்டுக்கள் யாவும் பரமனையே பாடுகிறது. எல்லா லோகங்களுக்கும் அவனே நாதன். எல்லா நாடும் அவன் நாடே. மௌனமாக விளங்கும் பரம்பொருளே நாதமாகவும், விந்தாகவும் விளங்குகின்றது. நாரணன் தங்கையான சக்திக்கு தன் இடப்பாகம் தந்த சிவனை தம உடம்பிலேயே இருப்பதை அறிந்து கொண்டு வாய் மூடி மௌனமாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரமே 'ஓம் நமசிவய' அவனை எண்ணி தியானம் செய்ய வாசி யோகம் தெரிய வேண்டும். அது இரவில் வேட்டைக்கு செல்லும் வேட்டைக்காரர்கள் மற்றவர்களிடம் பேசி தெரிவிக்க குசு குசு வென்று கூப்பிடுவார். இந்த இரகசிய பாஷையை அறிந்துகொண்டு அதன்படி வாசியோகபயிற்சி செய்துவந்தால் இப்பிறவிப் பிணி முடிய அதுவாகிய ஈசன் திருவடி கிட்டும். 
*****************************************
சிவவாக்கியம்-033

செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் 
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன் 
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின் 
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பது இல்லையே!

தென்னை மரத்தின் மேலே காய்க்கும் தேங்காயின் உள்ளே இளநீர் எப்படி சேர்ந்துள்ளதோ, அது போலவே ஈசன் எனது உள்ளத்தில் புகுந்து கோயில் கொண்டு இருக்கின்றான். என் உள்ளம் என்பதையும் அதிலே என் ஐயன் புகுந்து கோயில் கொண்ட இடம் எது என்பதையும் தெரிந்து கொண்டபின் இவ்வுலகத்தில் உள்ள ஆசைவயப்பட்ட மாந்தர்கள் முன்னம் வாய் திறந்து பேசா மௌனியானேன்.
*****************************************
சிவவாக்கியம்- 034

மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டு 
போய் ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே 
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் 
கூறுபட தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்தே.

செம்பு, பித்தளை, வெண்கலம் போன்றவைகளின் கலப்பினால் மாறுபட்டு செய்த ஓசை மணியை ஒலித்து, வண்டின் எச்சிலாகிய தேனைக் கொண்டு உளியினால் பற்பல வகைகளில் உடைத்து செதுக்கப்பட்ட கற்சிலையின் மீது ஊற்றி அபிஷேகம் செய்து அதன் உட்பொருளை அறியாத மூடர்களே! மெய்ப்பொருளாகிய ஈசன் நம்மிடமே மாறுபட்ட அண்டக்கல்லாக இருப்பதை அறிந்து அதிலேயே அபிஷேகம் செய்து அதனையே நோக்கி தியானிக்கவும், செய்த பாவங்கள் யாவையும் கூறுபட்டு தீர்க்கவும் மெய்குருவின் திருவடிகளை சிந்தையில் வைத்து தவம் செய்யுங்கள். 
*****************************************
சிவவாக்கியம்-035

கோயிலாவது ஏதடா குழந்கலாவது ஏதடா 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே 
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே 
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே .

கோயில் என்பது என்ன? குளங்கள் ஆவது எது?என்பதை அறியாமல் புறத்தில் அமைந்துள்ள கோயில்களையும், குளங்களிலும் தீர்த்தமாடி வணங்கிவரும் எம்குலமக்களே ! நமது உடம்பினுள் கோயிலாகவும், குலமாகவும் மனமே அமைந்துள்ளது. அம்மனதை நிலைநிறுத்தி தியானித்தால் ஆன்மாவை அறிந்து கொள்ளலாம். அவ்வான்மா என்றும் நித்தியமாக உள்ளது என்பதையும் அது உற்பனம் ஆவதும் இல்லை உடம்பைப் போல் அழிவதும் இல்லை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -036

செங்கலும் கருங்கலும் சிவதசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பாதம் அறிந்து நீர் உம்மை நீய் அறிந்தபின்
அம்பலம் நிரந்த நாதர் ஆடல் பாடல் ஆகுமே!

செங்கற்களாலும், கருங்கற்களாலும், சிகப்பு நிறம் பொருந்திய சாதி லிங்கத்திலும், செம்பினாலும், தராவினாலும் செய்யப்பட்ட சிலைகளிலும் சிவன் இருக்கிறான் என்கின்றீர்களே! உம்மிடம் சிவன் இருப்பதை அறிவீர்களா? உம்மை நீரே அறிந்து உமக்குள்ளே உயிரை உணர்ந்து அதில் கோயில் கொண்டு விளங்கும் சிவனின் திருவடியைப் பற்றி அதையே நினைந்து ஞான யோகம் செய்து தியானத்தால் திறந்து நான் யார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்குள்ளே திருசிற்றம்பலமாக விளங்கும் ஈசனின் நடனத்தையும் அதனால் அடையும் நாதலயமும் கிடைத்து இன்புறலாம்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -037

பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ
ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமோ

கால நேரம் தவறாமல் பூசை செயம் பக்தர்காள், பூசை என்றால் என்ன என்பதை அறிவீர்களா?  "பூ" என்பது நமது ஆன்மா. "சை" என்பது அசையாமல் நிறுத்துவது. இதுவே உண்மையான பூசையாகும். இந்த பூசையை நமக்குள்ளேதான் செய்ய வேண்டும். ஆன்மாவான பூவை அது எந்த இடத்தில் இருக்கிறதோ அன்க்கேயே நினைத்து நினைத்து நிறுத்தி அசையாமல் இருத்துவதே பூசை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை யோக தியானத்தால்தான் நமக்குள்ளே செய்ய வேண்டும். இதை விட்டு நீங்கள் செய்கின்ற பூசைகள் யாவும் புறச்சடங்குகளே. ஆதியான சக்தியோ அநாதியான சிவனோ இந்த பூசையை ஏற்றுக் கொண்டார்களா? ஆதலால் அப்பூசை செய்து தியானியுங்கள். அதனை ஆதியாகவும் அனாதியாகவும் நம் உயிரில் உறையும் சிவனும், சக்தியும் ஏற்றுக் கொள்வார்கள். 
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 038 -

இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கும் நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்கள் யாவையும் மனப்பாடம் செய்து நன்கு ஒதுவதினாலோ, உடம்பு முழுமையும் நிறைத்து பதினாறு பட்டைகள் போட்டு விபூதி பூசுவதினாலேயோ,  'சிவசிவ' என வெறும் வாயால் பிதற்றுவதினாலோ எம்பிரானாகிய சிவன் இருப்பதில்லை. நமக்குள்ளேயே உள்ள சிவனை அறிந்து நெஞ்சுருகி கண்ணில் நீர் மல்கி கசிந்து நினைந்து தியானிக்க வேண்டும். அந்த உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டு தியானம் தொடர்ந்து செய்தால் சர்க்கம் இல்லாத சோதியான அப்பரம் பொருளோடு கூடி வாழ்வோம். 
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -039

கலத்தில் வார்த்து வைத்த நீர் கடுத்த தீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்த தீ குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள் விசும்பு கொண்டதோ
மனத்தின் மாசை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ.

வெண்கலப்பானையில் பிடித்து வைத்த நீரை அடுப்பில் வைத்து தீயை அதிகமாக எரியவிட்டால், அப்பானையில் உள்ள நீர் முழுவதும் சுண்டிப்போய் ஆவியாகிவிடும். அப்பணியில் முழுவதும் வைத்த நீர் அதிலேயே கரைந்து மறைந்ததா? கடுமையாக எரியவிட்ட தீ குடித்ததா? அல்லது நிலமாகிய மண்ணில் கரைந்ததா? அணைந்ததும் அடங்கிய ஆகாயத்தை அடைந்ததா? என்பதை சிந்தியுங்கள். அந்த நீர் ஆவியாகி ஆகாயத்தை அடைந்ததுவே உண்மை என்பதைப் புரிந்து கொண்டு நம் மனதினுள்ளே உள்ள மாயையான பாவங்களையும், குற்றங்களையும் நீக்கி அதே மனதை இறைவன் பால் செலுத்தி தியானம் செய்து வந்தால் நம் ஆன்மாவை மனமாகிய ஆகாயத்தில் கரைக்கலாம். எப்படி நீரானது பானையில் தீயால் மறைந்ததோ அது போல தியானத்தீயால் ஆகாயம் ஆளலாம்.
*****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -040

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ மனத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முள்ளே

பறைச்சி என்பதும் பார்ப்பனத்தி என்பதும் ஏனாடா? அவர்கள் அனைவரும் பெண்கள்தானே. யாவருக்கும் தசை, தோல், எலும்பு யாவும் ஒரே மாதிரிதானே அமைந்துள்ளது. அதில் எதிலாவது இவள் தாழ்ந்த சாதி, அவள் உயர்ந்த சாதி என்று எழுதப்பட்டா  இருக்கிறதுபெண்கள் பால் கிடைக்கும் சிற்றின்பம் யாவருக்கும் ஒன்றாகவே அனுபவம் கிடைக்கிறது. இவை யாவையும் நன்கு பகுத்தறிந்து உனக்குள்ளே இருக்கும் இறையை உணர்ந்து தியானம் செய்து பாருங்கள்.
*****************************************

மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே! சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைகளான 550 பாடல்கள் மற்றும் பாட்டுச் சித்தரின் விளக்கங்களுடனும் காண வேண்டி.
http://sivavakiyar.blogspot.com நண்பர்களே! இணைப்பினை சொடுக்கி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை மேற்கண்ட வலைப்பூவில் இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்!!! மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்...அன்புடன் கே எம் தர்மா..

6 comments:

  1. தராவிலும்
    இதற்கு பொருள்?

    ReplyDelete
    Replies
    1. எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்.

      Delete
  2. நல்லது நன்றி உரித்தாகுக.

    ReplyDelete
  3. நட்டகல்லைத் எனத் தொடங்கும் பாடல் விளக்கம் தருக

    ReplyDelete
  4. அன்பேசிவம்

    ReplyDelete