Tuesday, May 28, 2013

சிவவாக்கியம் (091-100)

சிவவாக்கியம் (091-100)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
*******************************************
சிவவாக்கியம்-091

உடம்பு உயிர் எடுத்ததோ உயிர் உடம்பு எடுத்ததோ
உடம்பு உயிர் எடுத்தபோது உருவம் ஏது செப்புவீர்
உடம்பு உயிர் எடுத்தபோது உயிர் இறப்பது இல்லையே
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்து ஞானம் ஓதுமே!!!


உடம்பானது உயிர் எடுத்து வந்ததா? அல்லது உயிரானது உடம்பு எடுத்துக் கொண்டு வந்ததா? உடம்புதான் உயிர் எடுத்ததென்றால் உயிர் உயிர் வந்த பிறகுதானே உடம்பே தோன்றுகிறது. உடம்பில் உள்ள உயிருக்கு உருவம் ஏது சொல்லுங்கள். உடம்பும் உயிரும் கூடிய மனிதன் இறந்த பின்னும் அவன் ஆன்மா அழிவது இல்லையே. ஆகவே இவ்வுடம்பு உண்மையல்ல, என்பதை உணர்ந்து, ஆன்மாவே மெய் என்பதை அறிந்து உடம்பில் மெய்ப் பொருளாக இறைவன் இருப்பதைக் கண்டு தன்னை மறந்த தியான நிலையிலோ இருந்து உணர்ந்து கொண்டு ஞானம் போதியுங்கள்.
 *******************************************
 சிவவாக்கியம்-092

அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழும் ஆகினாய்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!!!

"ஓம்" என்ற ஓங்காரத்தில்தான் அனைத்தும் தோன்றுகின்றது. "ஓம்" என்பதில் அகாரம்
, உகாரம், மகாரம் என்ற மூன்று தத்துவங்கள் எழுத்துக்களாக அமைந்துள்ளது. அதில் "அ" என்னும் ஆகாயத் தத்துவத்தில் ஏழு உலகமும் ஆகி நிற்கின்றது. "உ" என்னும் விந்து தத்துவத்தில்தான் உருவம் தரித்து உருவாகின்றது. "ம" என்னும் த்த்துவத்தினால்தால் இவ்வுலகம் முழுவது மயங்குகின்றது. இதில் அவ்விலும், உவ்விலும் மவ்விலும் அமர்ந்திருப்பது "சி" என்னும் சிகாரமே.
 *******************************************
சிவவாக்கியம்-093 

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகான்
மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!!!

மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களே! மந்திரம் என்பது மனதின் திறமே! மந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும். மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் பொது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலாதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றோ அமைக்கப்பட்டது. அதனால் வாசி மேலே ஏறி பிராணசக்தி கூடி மரணமில்லா பெருவாழ்வு அடைவார்கள். மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியாநிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே!!!
 *******************************************
சிவவாக்கியம்-094

என்ன என்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை
பண்ணுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென
மின்னக்த்தில் மின் ஒடுங்கி மின்னதான வாறு போல்
என்னகத்தில் ஈசனும் யானும் அல்லது இல்லையே.

இலக்கணம் இல்லாத தமிழைப் போல் இலட்சியம் ஏதுமில்லாத மனிதர்களை என்னவென்று சொல்லுவது. பண்ணிசைத்துப் படும் செந்தமிழ் பாடல்கள் யாவும், பரம்பொருளின் பாதம் பற்றி இறைவனை அடைவதே குறிக்கோள் என்பதே மனிதனின் பண்பு என்று கூறுகின்றது.  மின்னலாது தோன்றி, மின்னளிலேயே ஒடுங்கி, மின்னலாக மறந்தது, அது எங்கிருந்தும் ஒளியைப் பெற்றுக் கொள்ளாமல், மேக மூட்டங்களின் மோதலால் தானே தோன்றி ஒடுங்குவதைப் போல் எனக்குள் மன ஓட்டத்தை நிறுத்தி வாசியால் கனலும் அனாலும் கலந்து என்னுள் சோதியான ஈசனைக் கண்டு தியானம் செய்தேன்அங்கு என்னையும் ஈசனையும் தவிர வேறு யாரும் இல்லையே
*******************************************
சிவவாக்கியம்-095

ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆழமான வாறு போல்
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர்
ஆறு வித்தை ஒர்கிளீர் அறிவிலாத மாந்தரே
பாரும் இத்தை உம்முளே பரப்பிரமம் ஆவீரே!

மிகச்சிறிய ஆலவிதைக்குள் பெரிய ஆலமரம் ஒடுங்கியிருந்து வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமாக ஆகின்றது. அதுபோல பரம் பொருளே ஓரெழுத்து வித்தாக இருந்து, விளைந்து இன்ப துன்பமுறும் உடலாக உலாவுகின்றது.  ஒரேழுத்தே பிரமமாகி நமக்குள் இருப்பதை அறிந்து அதனை நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் வாசியை ஏற்றி இறக்கி யோகவித்தை செய்வதை அறியாமல் இருக்கும் அறிவிலாத மனிதர்களே!!  உமக்குள்ளேயே இந்த வாசி யோகத்தைச்செய்து பாருங்கள். மெய்ப்பொருளை அறிந்துப் பார்ப்பானைப் பார்த்து, வித்தாக உள்ள ஈசனை தியானம் செய்யுங்கள். நீங்களே அந்த பரப்பிரம்ம்மம் ஆவீர்கள். 
*******************************************
சிவவாக்கியம்-096

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு ஏழுபிறப்பு அது இங்கிலை
 சவ்வுதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால்
அவவும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே

ஒரேழுத்து மந்திரமே முதல் எழுத்தாகிய அகாரம் தோன்றுவதற்கும் உயிர் எழுத்தாகி உகாரம் தோன்றுவதற்கும் காரணமாய் உள்ளதுஅது எவ்வாறு என்பதை அறிந்து தியாநிப்பவர்களுக்கு இங்கு ஏழு பிறப்பு என்பது இல்லை என்றாகிவிடும்.  தொண்டைச் சவ்வில் உதிக்கும் அந்த மந்திரத்தை 'ம்' என்று ஓதி தன்னிடமே  உள்ள பரம்பொருளில் இருத்தி தியானியுங்கள். அகாரத்திலும், உகாரத்திலும், மகாரத்திலும் சிகாரமாய் அமர்ந்திருப்பது ஊமைஎழுத்தே  என்பதை உணருங்கள். 
 *******************************************
சிவவாக்கியம்-097

நவ்விரண்டு காலத்தை நவின்ற மவ் வயிறதாய்
சிவ்வேரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வாய் ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!

பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலும், மகாரம் வயிறாகவும், சிகாரம் நெஞ்சிலிருந்து இரண்டு தோள்கள் ஆகவும், வகாரம் தொண்டையாவும், யகாரம் இரண்டு கண்களாகவும் அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது. தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக  இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
 *******************************************
சிவவாக்கியம்-098

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே! 

மூலாதார சக்கரத்தின் உள்ளே பாம்பைப் போல் சுருண்டு மூன்று வளையமாக குண்டலினி சக்தி கனலான தீயாக இருந்து தூங்கிக் கொண்டுள்ளது. அதனை வாசியோகத்தில் விழிப்புறச் செய்தால் அச்சக்தியானது சங்கின் ஓசையுடன் கிளம்பும். . அவ்வாசியை சுழுமுனை எனும் மூலனாடியால் முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றி சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.  அது சக்தியும் சிவனும் ஒன்றாகி இயங்கும் அரங்கன் பள்ளி கொண்ட இடத்தில் சிவமாக அமர்ந்திருப்பதை அறிந்து யோகஞான சாதகத்தால் தியானம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
 *******************************************
சிவவாக்கியம்-099

கடலிலே திரியும் ஆமை கரையிலே ஏறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறு போல்
மடலுலே இருக்கும் எண்கள் மணியரங்க சோதியை
உடலுலே நினைத்து நல்ல உண்மையானது உண்மையே!

கடலில் வாழும் ஆமையானது கரையில் ஏறி முட்டையிட்டு மணலைப் போட்டு மூடிவிட்டு கடலுக்கே சென்று விடும்.  பின் கடலில் திரிந்து கொண்டே நினைவாலே அடைகாக்கும். அதனால் முட்டைகள் பொறித்து அவை ரூபமாக வெளிவரும். அதன் பின்னரே தாயுடன் சேர்ந்து ஆமை குஞ்சுகளும் கடலில் திரயும். அவை ரூபம் அடைவதற்கு தாய் ஆமையின் நினைவே காரணமாய் இருந்தது போல், நம் உள்ளமாகிய தாமரையில் இருக்கும் மணியாக விளங்கும் அருட்பெருஞ் சோதியான ஆண்டவனை உடலுக்குள்ளேயே  மெய்ப் பொருளாக இருப்பதை எண்ணி நினைத்து தியானியுங்கள்.
 *******************************************
சிவவாக்கியம்-100

மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈண்ட தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே! 

அக்னி மண்டலம்சூரிய மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள் நம் உடற் தத்துவத்தில் உள்ளது. சந்திரகலை, சூரிய கலை சுழுமுனை நாடிகளில் ஓடும் காற்றை வாசியாக்கி மூலாதாரத்தில் செலுத்தி தூணாகிய முதுகுத் தண்டினில் முட்டி மேலேற்ற எண்டும் பாம்பைப் போல் சுருண்டு உறங்கும் குண்டலினி சக்தியை ஓங்காரத்தில் எழும் அகார உகார அட்சரத்தால் எழுப்பி உண்ணாக்கில் வைத்து ஊதவேண்டும். இந்த மந்திரமே பெற்ற தாயும் தந்தையும் எடுத்துரைத்த ஓங்காரமாகும். அதுவே 'ம்' என்ற நாத ஒலியுடன் சோதியான பிரம்மத்தில் சேரும், ஒரெழுத்தில் தோன்றுவதே ஓங்காரம். இதனைச் சொல்லித்தர யாரும் எங்கும் இல்லையே.
 *******************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment