Wednesday, May 15, 2013

சிவவாக்கியம் (051-060)

சிவவாக்கியம் (051-060)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!

அறிந்தால் வாழ்வும் நன்றே
********************************************************************************
சிவவாக்கியம்-051
 
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே


சொற்குருக்கள் ஆனவர்களும், சோதியான ஈசன் உடம்பில் ஆவதும், மெய்க்குருக்கள் ஆனவர்களும் வேண்டிய பூசை செய்வதும்  சற்குருக்கள் ஆனவர்களும், சாஸ்திரங்கள் யாவும் சொல்வதும் செய்க்குருக்கள் ஆனவர்களும் ஆகிய அனைவருமே தூமையில் கருவாகி திரண்டுருண்டு உருவானவர்களே.
********************************************************************************
சிவவாக்கியம்-052
 
கைவடங்கள் கொண்டு நீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டு நீர் எண்ணி எண்ணிப் பார்க்கிறீர்
பொய் இறந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல்
மெய் கடந்து உம்முளே  விரைந்து கூடல் ஆகுமே.
 
எவ்வளவோ கை முறைகள் கொண்டு யோக ஞானம் கற்றாலும் நம் மெய்யில் மெய்யான இடம் எதுவென அறியாமல் கண்களை சிமிட்டி நிற்கிறீர்கள். .ஈசன் இருக்கும் இடம்எங்கே என்று தெரிந்து கொள்ளாமல் எவ்விடத்தில் மனதை இறுத்தி தியானம் செய்கிறீர்கள். பொய்யாயின யாவையும் ஒழித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து, அங்கேயே சிந்தையைப் பொருத்தி அதையே நோக்கி தியானிக்க வல்லவர்கலானால் மெய்ப்பொருளில் சோதியாக விளங்கி எல்லாவற்றையும் கடந்து நின்ற ஈசனை உங்களுக்குள்ளேயே கண்டு விரைவில் சேர்ந்து கூடி இறவா நிலையைப் பெறுங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்-053

ஆடு காட்டி வேங்கை அகப்படுத்து மாறுபோல்
மாடு காட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ 
கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா 
வீடு காட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே

ஆட்டை கட்டி வைத்து, வலை விரித்து வேங்கைப் புலியை பிடிப்பது போல் மாடு, மக்கள், செல்வம் என்ற ஆசை வலைக்குள் என்னை அகப்படுமாறு மயங்கச் செய்வது முறையோ!!  தாருகாவனத்து முனிவர்கள் எல்லாம் நம் அறிவால் எதையும் சாதிக்கும் சக்தி நமக்கு இருக்க நாம் என் ஈசனை வணங்க வேண்டும் என ஆணவம் பெருகி இறைவனை மதியாது யாகம் செய்தனர். ஈசன் பிச்சடனராக நிர்வாண கோணத்தில் தாருகாவனம் சென்றார். ஈசனை கண்ட ரிஷி பத்தினிகள் அனைவரும் அவர் அழகில் மயங்கிய வண்ணம் அப்படி அப்படியே  தங்கள் நிலை மறந்து பின் தொடர்ந்தனர். இதனைக் கண்ட முனிவர்கள் இறைவனை உணராது கோபம் கொண்டு யாகத் தீயிலிருந்து யானையை உருவாக்கி ஈசனைக் கொள்ள ஏவினர். ஈசன் அதனைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார். அதுபோலன்றி ஆணவம் அகங்காரம் என்னைப் பற்றாமல் என் அறிவை மயக்காமல் மெய்யான வீட்டை எனக்குக் காட்டி அந்த வழியிலே தியானம் கூட்டி உன்னை அடையும் வழியைக்காட்டி என்னை வெளிப்படுத்த வேண்டும்.
********************************************************************************
சிவவாக்கியம்-054

இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு 
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
டல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ

உனது இடது கண் சந்திரன், வலது கண் சூரியன். இடது கையில் சங்கு சக்கரமும் வலது கையில் மான் மழுவையும் கொண்டு பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி காண இயலாமல் பூமிக்கும் வானத்திற்கும், எட்டு திசைகளுக்கும் அப்புறமாய் நின்ற சிவனே! நீ என் உடம்பில் கலந்து நின்ற மாயத்தை யார் காண வல்லவர்கள்? என் உடம்பினில் மனதை அறிந்து மாயையே நீக்கி அறிவாய் நீ உள்ளதை அறிந்து கொண்டேன்.
********************************************************************************
சிவவாக்கியம்-055  
 நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோய்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந் திருந்திடும்
ஏறில்ஏறும் ஈசனும் இயங்கு சக்ர தரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.

ஒரு படி நீரில் ஒரு படி உப்பைச் சேர்த்தால் அது அந்நீரிலேயே கரைந்து ஒரு
படி உப்பு நீராகத்தான் இருக்கும். அதுபோலதான் திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் திருசிற்றம்பலத்தில் நடனமிடும் ஈசனும் ஒன்றாகவே நம் உள்ளத்தில் அமர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளுங்கள். எருதாகிய நந்தியில் ஏறும் ஈசனையும், சக்ராயுதத்தை உடைய விஷ்ணுவையும் அதுதான் பெரிது, இதுதான் பெரிது என வேறுபடுத்திக் கூறுபவர்கள் மெய்ப்பொருளை அறியமாட்டாது கொடுமையான நரகக் குழியில் வீழ்வார்கள்.

********************************************************************************
 சிவவாக்கியம்-056 
தில்லை நாயகன் அவன்  திருவரங்கனும் அவன்
எல்லையான புவனமும் அமர்ந்து  ஏகமுத்தியானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!


தில்லையில் ஆடும் நடராஜனும் அதுவே. திருவரங்கத்தில் பள்ளி கொண்ட நாராயணனும் அதுவே. எல்லா உலகங்களுக்கும் எல்லையான ஆகாயமாகவும், பிரம்மம் ஆனா ஏகமாகவும், முத்தீயாகவும் இருப்பது அதுவே. பாலும் தீ நாக்கும் உள்ளவர்கள் சிவனே பெரியவன் என்றும் அல்ல பெருமாளே பெரியவன் என்றும் அவரவர் எண்ணம்போல் படித்ததை மட்டும் வைத்து பேசி மகிழ்வார்கள். புராணக் கதைகளில் நடந்த வல்லபங்களை கூறி வேறுபடுத்தி பேசுபவர்கள் தன் ஆன்மாவை அறியமாட்டது வாய்புழுத்து மடிவார்கள்.

********************************************************************************
 சிவவாக்கியம்-057
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்களப்பன் எம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழும் தவச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் அடங்கலாடல் காணுமே.


எட்டு திசைகளுக்கும், எல்லா உயிர்களுக்கும் தந்தையாக இருப்பவன் எம்பிரானாகிய ஈசனே. சக்தியாகிய நம் உடம்பில் வித்தாகவும், உயிராகவும், அறிவாகவும் விளங்கும் வாலியை அறிந்து தியானம் செய்ய செய்ய அருட்பெருஞ் சோதியாக ஆண்டவன் வருவான். சித்தம் தெளிந்து, அறிவை அறிந்து நான்கு வேதங்களும் கூறும் உள்ளமாகிய கோயிலின் வாசலை திறந்து ஈசனின் நடனங்கண்டு ஆனந்தம் அடைந்து அமைதி பெறலாம்.
****************************************
சிவவாக்கியம்-058
உற்ற நூல்கள் உம்முளே உணந்துனர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருந்திடில்
சுற்றமாக உம்முளே சோதி என்றும் வாழுமே.

இறைவனுக்கு உற்ற நூல்களை உணர்ந்துணர்ந்து பாடுங்கள். பற்றுக்களை அறத்து, தவத்தில் நிட்று பராபரமான எசனை சேருங்கள். பகைமைகளை ஒழித்து உள்ளத்தில் மாசுகளை அறுத்து, பத்தாம் வாசலை திறந்து ஆணவத்தையும், கர்வத்தையும் அழித்து மெய்ப்பொருளை அறிந்து தியானம் செய்து வந்தால் உனக்குள் பரிசுத்தமான மெய்ப்பொருளில் ஈசன் சோதியாக என்றென்றும் நிலைத்து வாழ்வார் மரணம் இல்ல பெருவாழ்வில் வாழலாம். 
****************************************
சிவவாக்கியம்-059

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே

காலைப் பொழுதில் எழுந்தது அது என்ன என்பதையும், நீராகி, நின்று வந்த அது என்ன என்பதையும் நாத விந்தான தாதுவை புகுந்து நெருப்பாகி விளைந்த அது என்ன? என்பதி எல்லாம் நமக்குள் நன்கு அறிந்து அது "மெய்பொருளே" என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது பஞ்சபூத தன்மையைக் காட்டும் "நமசிவய"  எனும் ஐந்தெழுத்தாகவும்    அறிவு, உணர்வு, நினைவு என்பவைகளை உணர்த்தும் அகாரம், உகாரம், இகாரம் என்ற மூன்றெழுத்து ஓம் எனும் ஓங்காரகமாக உள்ளதை உணர்ந்து ஓம் நமசிவய எனும் அச்சரத்தை  உங்களுக்குள் ஓதி உயர்வடையுங்கள். ஒரெழுத்தான வித்திலிருந்து ஐந்து மூன்றும் எட்டாகி உடம்பாக விளங்குவதை உணர்ந்து அதுவே ராம மந்திரமாக இருப்பதை அறிந்து ராமநாமத்தை ஓதி தியானியுங்கள்.

********************************************************************************
சிவவாக்கியம்-060
அகாரம் என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ
உகாரம் என்ற அக்கரத்துள் உவ்வு வந்து உதித்ததோ
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே


அகாரம் என்ற '' எழுத்தில் ஒரெழுத்தான அவ்வு தோன்றியதோ! உகாரம் என்ற ' ' எழுத்தில் ஊமைஎழுத்தான உவ்வு வந்து தோன்றியதோ! இந்த எட்டிரண்டுமான ' '-வும் ''-வும் 'சி'என்ற சிகாரம் இன்றி தோன்றியிருக்க முடியுமா? இதனை எவ்வித மன விகாரமும் அற்ற யோகிகளே விரிவாக எடுத்துரைத்து விளக்க வேண்டும். எந்த மொழி எழுத்துக்களுக்கு முதல் எழுத்தாக இருப்பது (.) புள்ளியாகவும், பேசும் எழுத்தாக மாறும் பொது 'சி'
யாகவும் உள்ளது, ஆதலால் சிகாரம் இல்லாமல் எந்த எழுத்தும் நிற்காது என்பதி புரிந்துகொண்ட அந்த ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்..
********************************************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்
!!!

No comments:

Post a Comment